அகமதாபாத்: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, ஒருநாள் தொடரில் 0 - 2 என்ற கணக்கில் தோல்வி அடைந்து இருக்கிறது. இந்த நிலையில், இங்கிலாந்து அணியின் துவக்க வீரர் பென் டக்கெட் அதிக தன்னம்பிக்கையுடன் பேசுவதாக நினைத்து ஆணவமாக பேசி உள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது போட்டியிலும் இங்கிலாந்து அணி தோல்வியடைந்தாலும் பரவாயில்லை, ஏனெனில் இங்கிலாந்து அணி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் வைத்து இந்திய அணியை வீழ்த்தும் என்று கூறி இருக்கிறார்.

பென் டக்கெட் பேசியதாவது - "நாங்கள் இங்கே ஒரே ஒரு விஷயத்திற்காக வந்திருக்கிறோம், அது சாம்பியன்ஸ் டிராபியை வெல்வதுதான். நாங்கள் இன்னும் அதைச் செய்ய முடியும் என்று நம்புகிறோம். முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலைகள், நாங்கள் எதிர்கொள்ளும் அணிகளும் முற்றிலும் வேறுபட்டவை. நாங்கள் இந்தியாவிடம் 3-0 என்று தோற்றாலும், சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் அவர்களை வென்றால் இந்த தோல்வி பற்றி எங்களுக்கு கவலையில்லை. அதைச் செய்தால், அந்த இறுதிப் போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றால், இந்த தொடர் தோல்வியை நாங்கள் திரும்பிப் பார்க்க மாட்டோம்," என்று பென் டக்கெட் கூறி இருக்கிறார்.
பென் டக்கெட்டின் இந்த ஆணவப் பேச்சு நகைப்புக்குரிய விஷயமாகவும், விமர்சனத்துக்குரியதாகவும் உள்ளது. சாம்பியன்ஸ் டிராபியில் பல்வேறு அணிகளை சந்திக்க வேண்டிய நிலையில், இங்கிலாந்து அணி ஒரே அணிக்கு எதிராக மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்துவிட்டு எவ்வாறு சாம்பியன்ஸ் டிராபியில் வெவ்வேறு அணிகளை வெவ்வேறு சூழ்நிலைகளில் வீழ்த்த முடியும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை முதல் இப்போது இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் வரை இங்கிலாந்து அணி இடையே ஆடிய எந்த ஒருநாள் தொடரிலும் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அணி ஒருநாள் போட்டிகளில் படுமோசமாக செயல்பட்டு வருகிறது.
மேலும், இருதரப்பு ஒருநாள் தொடரில் இந்திய அணியிடம் தொடர்ந்து தோல்வியடைந்து இருக்கும் இங்கிலாந்து அணி, சாம்பியன்ஸ் டிராபியில் எவ்வாறு சிறப்பாக செயல்படப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.