அகமதாபாத்: இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியில் சேர்க்கப்பட்டு இருக்கும் நிலையில், அவர் பவர் பிளே ஓவரில் பந்து வீசினால் இந்திய அணிக்கு பின்னடைவு தான் ஏற்படும் என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். மேலும், ஹர்ஷித் ராணாவுக்கு பதிலாக முகமது சிராஜை சேர்க்க வேண்டும் என கூறி வருகின்றனர்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஹர்ஷித் ராணா தனது முதல் இரண்டு ஓவர்களை பவர் பிளே ஓவரில் வீசினார். அப்போது அதிக ரன்களை விட்டுக் கொடுத்ததால் இந்த விமர்சனம் எழுந்தது.

இந்த ஒரு போட்டியில் மட்டுமல்லாமல், இந்த தொடரின் மூன்று போட்டிகளிலும் பவர் பிளே ஓவர்களில் அவர் அதிக ரன்களை விட்டுக் கொடுத்ததுடன், விக்கெட்டுகளையும் வீழ்த்தவில்லை. அதே சமயம் பவர் பிளே அல்லாத ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஹர்ஷித் ராணா மூன்று ஓவர்களில் 37 ரன்களை விட்டுக் கொடுத்திருந்தார். இரண்டாவது ஒருநாள் போட்டியில் இரண்டு ஓவர்களில் 14 ரன்களை விட்டுக் கொடுத்திருந்தார். மூன்றாவது போட்டியில் இரண்டு ஓவர்களில் 22 ரன்களை விட்டுக் கொடுத்திருந்தார்.
அதாவது இரண்டு போட்டிகளில் அவர் சராசரியாக ஒரு ஓவருக்கு 11 ரன்களுக்கும் அதிகமாக விட்டுக் கொடுத்து இருக்கிறார். மற்றொரு போட்டியில் ஒரு ஓவருக்கு 7 ரன்கள் என்ற விகிதத்தில் ரன்களை கொடுத்து இருக்கிறார். இது மிகவும் மோசமான செயல்பாடாகும்.
ஜஸ்பிரித் பும்ராவுக்கு மாற்று வேகப்பந்து வீச்சாளராக ஹர்ஷித் ராணா இந்திய அணியில் இடம் பிடித்திருக்கும் நிலையில், அவரால் பவர் பிளே ஓவர்களில் கட்டுக்கோப்பாக பந்துவீச முடியவில்லை என்பது சிக்கலான விஷயமாக அமைந்துள்ளது. முகமது ஷமி மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகிய இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் அணியில் இடம் பெற்று இருந்தாலும், அவர்கள் இருவருமே அனைத்து போட்டிகளிலும் விளையாடுவார்கள் என சொல்ல முடியாது.
அவர்களுக்கு காயம் ஏற்பட்டால், ஹர்ஷித் ராணா போட்டியில் பங்கேற்க வேண்டிய நிலை ஏற்படலாம். எனவே ஹர்ஷித் ராணாவுக்கு பதிலாக முகமது சிராஜை அணியில் சேர்த்து இருக்கலாம் என்ற விமர்சனம் இப்போது எழுந்து இருக்கிறது.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி ஆடும் போட்டிகள் துபாய் மைதானத்தில் நடக்க இருக்கும் நிலையில், அங்கு ஹர்ஷித் ராணா பிளேயிங் லெவனில் இடம் பெறுவது சந்தேகம் தான். அந்த மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதால், இந்திய அணியில் ஒன்று அல்லது இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே இடம் பெறுவார்கள். அந்த சூழ்நிலையில் முகமது ஷமி மற்றும் அர்ஷ்தீப் சிங் அணியில் இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளது.