அகமதாபாத்: இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் இந்திய மண்ணில் ஒருநாள் போட்டிகளில் மிக மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அவர் வெறும் 6 ரன்களில் ஆட்டம் இழந்தார்.
இந்த தொடரின் இரண்டாவது போட்டியில் 34 ரன்கள், முதல் ஒருநாள் போட்டியில் 52 ரன்கள் எடுத்திருந்தார். இது நல்ல செயல்பாடாக இருந்தாலும், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது இந்திய மண்ணில் ஒருநாள் போட்டிகளில் ஜோஸ் பட்லர் படுமோசமாகவே செயல்பட்டு இருக்கிறார்.

இதுவரை இந்தியாவில் 20 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார் ஜோஸ் பட்லர். அதில் 19 இன்னிங்ஸ்களில் 313 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். தற்போது நடைபெற்ற தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் எடுத்த 52 ரன்களே அவரது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். அவரது பேட்டிங் சராசரி 16.47 ஆகவே உள்ளது.
இந்திய மண்ணில் ஒருநாள் போட்டிகளில் வெளிநாட்டு பேட்ஸ்மேன்களின் மோசமான பேட்டிங் சராசரியில் இது இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. ஜிம்பாப்வேயின் கை விட்டால் 13.52 என்ற பேட்டிங் சராசரியுடன் இந்த மோசமான பேட்ஸ்மேன்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார்.
இந்தியாவில் ஒருநாள் போட்டிகளில் ஒரு வெளிநாட்டு வீரரின் குறைந்தபட்ச பேட்டிங் சராசரி (முதல் 7 பேட்டிங் வரிசையில் ஆடிய வீரர்கள் - குறைந்தபட்சம் 15 இன்னிங்ஸ் ஆடியவர்கள்)
13.52 - கை விட்டால்
16.47 - ஜோஸ் பட்லர்
20.16 - ஆண்ட்ரூ பிளின்டாஃப்
23.38 - முகமது நபி
23.50 - டுவைன் பிராவோ
ஜோஸ் பட்லர் இந்த தொடரில் அரை சதம் அடித்திருந்தாலும் இந்த மோசமான சாதனை பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறார். அந்த ஒரு அரைசதத்தை ஜோஸ் பட்லர் அடிக்காமல் போயிருந்தால் இந்தப் பட்டியலில் முதல் இடத்தை பிடித்து இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இங்கிலாந்து கேப்டனாகவும் அவர் பெரும் பின்னடைவைச் சந்தித்து இருக்கிறார். இந்திய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1 - 4 என இழந்த இங்கிலாந்து அணி, தற்போது ஒருநாள் தொடரை 0 - 3 என இழந்துள்ளது. அடுத்து சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குச் செல்ல இருக்கும் இங்கிலாந்து அணிக்கு இது மிகப்பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.