அகமதாபாத்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதவுள்ள மூன்றாவது ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த போட்டியில் இதுவரை வாய்ப்பு கிடைக்காத வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்பியன்ஸ் டிராபி அணியில் இடம்பெற்றுள்ள ரிஷப் பண்ட் மற்றும் அர்ஷ்தீப் சிங்குக்கு இதுவரை இங்கிலாந்து ஒருநாள் தொடரில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர்கள் இருவரும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாட அதிக வாய்ப்புள்ளது. ஆனால், ரிஷப் பண்டை யாருக்கு பதிலாக ஆடவைப்பது என்பதில் ஒரு சிக்கல் உள்ளது.
கே.எல். ராகுல் இந்திய அணியின் விக்கெட் கீப்பராகவும், ஆறாம் வரிசை பேட்ஸ்மேனாகவும் தற்போது விளையாடி வருகிறார். அவரை நீக்கிவிட்டு ரிஷப் பண்டை விக்கெட் கீப்பராகவும் அதே ஆறாம் வரிசையில் ஆடவைக்கவும் முடியும். ஆனால், கே.எல். ராகுல் இந்த தொடரில் இதுவரை ரன் குவிக்கவில்லை.
எனவே, ராகுலுக்கு பேட்டிங் பயிற்சிக்காக இந்த போட்டியில் வாய்ப்பு அளிக்க வேண்டிய அவசியம் உள்ளது. அவரே சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணியின் முதன்மை விக்கெட் கீப்பராக இருப்பார் எனவும் கூறப்படுகிறது. ரிஷப் பண்ட் மாற்று கீப்பராகவே சாம்பியன்ஸ் டிராபி அணியில் இடம் பெற்றுள்ளார்.
எனவே, இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஒரே நேரத்தில் கே.எல். ராகுல் மற்றும் ரிஷப் பண்டை ஆட வைக்க இந்திய அணி திட்டமிடலாம். ஸ்ரேயாஸ் ஐயரை நீக்கிவிட்டு ரிஷப் பண்டை ஆட வைக்க முடியும். எனினும், அந்த முடிவை பயிற்சியாளர் மற்றும் கேப்டன் எடுப்பார்களா? என பார்க்க வேண்டும்.
வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியில் இடம் பெற்றுள்ளார். அவர் நிச்சயமாக அந்த தொடரில் பிளேயிங் லெவனிலும் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அவருக்கு பயிற்சி அளிக்கும் வகையில் மூன்றாவது ஒருநாள் போட்டியில் வாய்ப்பு அளிக்க வேண்டிய அவசியம் உள்ளது.
வேகப் பந்துவீச்சாளர்களான முகமது ஷமி அல்லது ஹர்ஷித் ராணா ஆகிய இருவரில் ஒருவர் நீக்கப்பட்டு, அந்த இடத்தில் அர்ஷ்தீப் சிங் விளையாட அதிக வாய்ப்புள்ளது. இந்திய அணியில் தற்போது இடம் பெற்றுள்ள சுழற் பந்து வீச்சாளர்களில் பெரிய மாற்றம் இருக்காது.
ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் / ரிஷப் பண்ட், அக்சர் படேல், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அர்ஷ்தீப் சிங்/ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி, முகமது ஷமி.