அகமதாபாத்: இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறி இருக்கும் ஸ்ரேயாஸ் ஐயர், ஒருநாள் போட்டிகளில் தனது சிறப்பான பேட்டிங்கை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார். அவருக்கு இந்திய ஒருநாள் அணியில் நிலையான இடம் அளிக்கப்படாமல் இருக்கும் நிலையில் அவர் விராட் கோலியின் சாதனை ஒன்றை முறியடித்து இருக்கிறார்.
சமீபத்தில் நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அவர் அபாரமாக ஆடி அரை சதம் அடித்தார். 64 பந்துகளில் 78 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இந்த தொடரில் இதற்கு முன்னதாக நடந்த இரண்டு போட்டிகளிலும் அவர் சிறப்பாக ஆடி இருந்தார். முதல் போட்டியில் அரைசதம் அடித்திருந்தார். அப்போது 59 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இரண்டாவது போட்டியில் 44 ரன்கள் எடுத்திருந்தார்.

இந்த அபார ஆட்டத்தின் மூலம் ஸ்ரேயாஸ் ஐயர் ஒருநாள் போட்டிகளில் 25 முறை 50 ரன்களை கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். இந்த மைல்கல்லை அதிவேகமாக எட்டிய இந்திய வீரர்களின் பட்டியலில் முதலிடத்தையும் பிடித்துள்ளார். நவ்ஜோத் சிங் சித்து மற்றும் விராட் கோலியின் முந்தைய சாதனைகளை அவர் முறியடித்து இந்த சாதனையை படைத்திருக்கிறார்.
முன்னதாக விராட் கோலி மற்றும் நவ்ஜோத் சிங் சித்து 68 இன்னிங்ஸ்களில் ஒருநாள் போட்டிகளில் 25 முறை 50க்கும் மேற்பட்ட ஸ்கோர்களை எடுத்து இருந்தனர். தற்போது ஸ்ரேயாஸ் ஐயர் 60 இன்னிங்ஸ்களிலேயே 25 முறை 50 க்கும் மேற்பட்ட ஸ்கோர்களை எடுத்து இருக்கிறார்.
இந்த பட்டியலில் கேஎல் ராகுல் நான்காவது இடத்தில் இருக்கிறார். அவர் 69 இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லை எட்டி இருந்தார். ஷிகர் தவான் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார். அவர் 72 இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லை எட்டி இருந்தார்.
ஸ்ரேயாஸ் ஐயரின் இந்தச் சாதனை அவரது திறமைக்கும், கடின உழைப்புக்கும் சான்றாக விளங்குகிறது. மேலும், இதன் மூலம் அணியில் தனது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். அடுத்து வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் அவர் தனது திறமையை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு உதவுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.