ராஜ்கோட்: இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால். அந்த வெற்றியை கூட நிம்மதியாக கொண்டாட முடியாத நிலையில் தான் அந்த அணி இருக்கிறது. ஏனெனில், இந்த போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்த போது 171 ரன்கள் எடுத்து இருந்தது.
அப்போது இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளரான வருண் சக்கரவர்த்தி 4 ஓவர்களில் 24 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார். இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்களால் வருண் சக்கரவர்த்தியின் பந்துவீச்சை கணிக்க முடியவில்லை. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இதே தான் நடந்தது.

அது மூன்றாவது போட்டியிலும் தொடர்ந்தது. "மிஸ்டரி ஸ்பின்னர்" என அறியப்படும் வருண் சக்கரவர்த்தியின் பந்துவீச்சை கணித்து ஆடுவதில் இங்கிலாந்து வீரர்களுக்கு சிரமம் இருப்பது தெளிவாக தெரிகிறது. முதல் டி20 போட்டியில் மூன்று விக்கெட்களையும், இரண்டாவது போட்டியில் இரண்டு விக்கெட்களையும் வீழ்த்திய வருண் சக்கரவர்த்தி, மூன்றாவது போட்டியில் அதிரடியாக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இங்கிலாந்து அணி நிர்ணயித்த 172 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி சேஸிங் செய்த போது 145 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இந்திய அணியின் பேட்டிங் மிக மோசமாக இருந்ததாலேயே இந்த போட்டியில் இந்திய அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
அதே சமயம் இங்கிலாந்து அணி முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்திருந்தாலும், மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்றது. அந்த மகிழ்ச்சியை விட அவர்களுக்கு அடுத்த இரண்டு போட்டிகளில் வருண் சக்கரவர்த்தியை எப்படி சமாளிப்பது? என்பதே மிகப்பெரிய சவாலாக இருக்கும்.
அது குறித்து இங்கிலாந்து அணி நிர்வாகம் இந்த போட்டி முடிந்த பின்னரும் பேசி இருப்பார்கள். அந்த அளவுக்கு மிஸ்டரி ஸ்பின்னரான வருண் சக்கரவர்த்தி இங்கிலாந்து அணியை கதி கலங்க வைத்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். அடுத்து வரும் போட்டிகளில் வருணை சமாளிக்க இங்கிலாந்து அணி திட்டங்களை வகுக்கக் கூடும்.