ராஜ்கோட்: இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் ஜோப்ரா ஆர்ச்சர் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். சாம்சன் வெறும் 3 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்து இருந்தார். இதற்கு முந்தைய இரண்டு போட்டிகளிலும் அவர் ஜோப்ரா ஆர்ச்சரின் பவுலிங்கில் தான் தனது விக்கெட்டை இழந்து இருந்தார்.
தொடர்ந்து மூன்று போட்டிகளிலும் சஞ்சு சாம்சன் குறைந்த ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து இருக்கிறார். அத்துடன் ஒரே பவுலரிடம் தனது விக்கெட்டையும் இழந்து இருக்கிறார். இதை அடுத்து சஞ்சு சாம்சன் இனி இந்திய டி20 அணியில் இடம் பிடிப்பது கடினம் என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். வரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் எனவும் சிலர் கொந்தளித்து வருகின்றனர்.

இதற்கு முன் சஞ்சு சாம்சன் வங்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிராக அதிரடியாக ஆடி சதங்களை அடித்து இருந்தார். இதுவரை டி20 சர்வதேச போட்டிகளில் அவர் 3 சதங்களை அடித்து இருக்கிறார். அதே சமயம் அதிக முறை டக் அவுட்டும் ஆகி இருக்கிறார். இப்படி நிலையற்ற பேட்ஸ்மேனாக இருக்கிறார் சஞ்சு சாம்சன்.
தற்போது இங்கிலாந்து தொடரில் தொடர்ந்து ஜோப்ரா ஆர்ச்சரை எதிர்கொள்ள முடியாமல் ஆட்டம் இழந்து இருக்கிறார். மூன்றாவது போட்டிக்கு முன்னதாக ஆர்ச்சரின் பந்துவீச்சை எதிர்கொள்ள வேண்டி சிறப்பு பயிற்சியை மேற்கொண்டு இருந்தார். அதற்காக பிளாஸ்டிக் பந்தை வைத்து அவர் பயிற்சி செய்திருந்தார்.
அதிக பவுன்ஸ் மற்றும் ஃபுல் லென்த் பந்துகளை எதிர்கொள்ள பயிற்சி செய்தும் மூன்றாவது டி20 போட்டியில் வெறும் 3 ரன்கள் மட்டும் எடுத்த நிலையில் அதே ஆர்ச்சரிடன் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்து இருக்கிறார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய இந்த மூன்றாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி விக்கெட் வீழ்ச்சிக்கு நடுவே அதிரடியாக ரன் குவித்தது. 20 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து 171 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்திய அணி 85 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தவித்தது. அதன் பின் 20 ஓவர்கள் முடிவில் 145 ரன்கள் மட்டுமே எடுத்து 26ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.