ராஜ்கோட் : இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணிக்கு சாதகமாக டாஸ் விழுந்தது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றி விடும் என்பதால் இந்த போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த சூழலில் ராஜ்கோட் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கிறது. இந்த சூழலில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூரியகுமார் யாதவ், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வதாக அறிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சூரியகுமார் "நாங்கள் முதலில் பந்து வீச முடிவு எடுத்து இருக்கின்றோம்".

"ஆடுகளும் ரன்குவிப்புக்கு சாதகமாக இருக்கும். இரண்டாவதாக பேட்டிங் செய்யும்போதும் ஆடுகளம் தோய்வு அடையாது. ராஜ்கோட்டில் எப்போதுமே ரன் குவிப்புக்கு சாதகமான ஆடுகளம் தான் இருக்கும். நாங்கள் டி20 கிரிக்கெட்டை ஆக்ரோஷமாக விளையாட முடிவெடுத்தோம். அதேசமயம் சூழலுக்கு தகுந்தார் போல் விளையாட வீரர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்".
"கடந்த போட்டியில் திலக் வர்மா எங்களை காப்பாற்றினார். தற்போது இந்த தொடரை நாங்கள் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடராக தான் நினைக்கின்றோம். இந்த போட்டிக்காக வீரர்கள் அனைவரும் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். இன்றைய ஆட்டத்தில் ஆர்ஸ்தீப் சிங் ஓய்வெடுத்து இருக்கிறார். அவருக்கு பதிலாக முகமது சமி அணிக்கு திரும்பியுள்ளார்" என சூரியகுமார் கூறினார்.
இதை தொடர்ந்து பேசிய இங்கிலாந்து அணி கேப்டன் ஜாஸ் பட்லர்," ரன் குவிப்புக்கு சாதகமான ஆடுகளமாக இருக்கிறது. நாங்களும் டாஸ் வென்று இருந்தால் முதலில் பந்துவீச்சு தான் தேர்வு செய்திருப்போம். எனினும் பெரிய இலக்கை நிர்ணயிக்க நாங்கள் முயற்சி செய்வோம். நேற்று ராஜ்கோட்டில் நாங்கள் நல்ல பயிற்சி எடுத்துக் கொண்டு இரண்டாவது டி20 போட்டியில் நாங்கள் அபாரமாக செயல்பட்டு வெற்றிக்கு அருகே வந்தோம்".
"இன்றைய ஆட்டத்திலும் நாங்கள் சிறப்பாக விளையாடுவோம் என நம்புகிறேன். இந்தியா ஒரு பலமான அணி. அவர்கள் எப்படி விளையாடுவார்கள் என்று எங்களுக்கு நன்றாக தெரியும். எனவே நாங்கள் பெரிய இலக்கை இன்று அடிப்போம் என நினைக்கின்றேன்" என்று ஜாஸ் பட்லர் கூறியுள்ளார்.