
2வது டெஸ்ட் போட்டி
2வது டெஸ்டில் பெற்ற வெற்றியின் காரணமாக இந்திய அணி இந்த தொடரில் 1 - 0 என முன்னிலை வகிக்கிறது. முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியின் வழிம்பு வரை இங்கிலாந்து சென்ற சூழலில் மழை பெய்து காப்பாற்றியது. ஆனால் 2வது டெஸ்டில் இங்கிலாந்து அணி முதலில் சிறப்பாக விளையாடிய போதும், கடைசி நேர சொதப்பலால் தோல்வியை தழுவியது. பும்ராவிடம் ஏற்பட்ட பிரச்னையை பெரிதாக கருதியதால், போட்டியில் கோட்டையை விட்டனர் இங்கிலாந்து படை.

விறுவிறுப்பான ஆட்டம்
ஆட்டத்தின் ஒவ்வொரு ஓவருக்கும் இடையே பிரச்னை, தகராறு என 2வது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. குறிப்பாக முன்னணி பேட்ஸ்மேன்களே ரன் அடிக்க தவறிய நிலையில் பும்ரா மற்றும் முகமது ஷமி ஆகியோர் 89 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆட்டத்தை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் சென்றனர். இந்நிலையில் 3வது டெஸ்ட் போட்டியையும் அதே போன்ற ஒரு விறுவிறுப்பு கட்டத்திற்கு வானிலை கொண்டு செல்லும் எனத் தெரிய வந்துள்ளது.

வானிலை நிலவரம்
இரு அணிகளும் மோதும் 3வது டெஸ்ட் போட்டி, ஹெட்டிங்லியில் உள்ள லீட்ஸ் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது. 2வது டெஸ்டில் ஒரு சில நேரங்களில் மழை குறுக்கீடு இருந்தது. ஆனால் 3வது டெஸ்டில் ஆட்டத்தின் வெற்றியாளரை தீர்மானிக்கும் நாளன்றே மழைப் பொழிய வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. அதாவது ஆட்டத்தின் 5ம் நாள் மழைக்கு வாய்ப்புள்ளதாம்.

மழை வாய்ப்பு
ஹெட்டிங்லி நகரத்தில் கடந்த சில நாட்களாக வானிலையில் பெரிய அளவில் மாற்றம் எதுவும் ஏற்படாமல் உள்ளது. இதனால் ஆட்டத்தின் முதல் நாளன்று நல்ல வானிலையுடன் வெயில் அடிக்கும் எனக் கூறப்படுகிறது. ஆனால் 2வது நாள் முற்றிலும் மாறுபட்டுள்ளது. 2வது நாளன்று வானம் மேகமூட்டத்துடனும், அவ்வப்போது மழைப்பொழிய வாய்ப்புள்ளது. 3வது நாளன்று இடியுடன் கூடிய மழைக்கும் வாய்ப்புள்ளது. சுமார் 62% இடிக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

விறுவிறுப்பு கட்டம்
ஆனால் ஆட்டத்தின் 4 மற்றும் கடைசி நாளன்று மழையின் பாதிப்பு ஏதும் இருக்காது. முதல் நாளை போலவே மீண்டும் நல்ல வெளிச்சமாக வெயிலை காணலாம் எனத் தெரிகிறது. வானிலை அறிக்கையை வைத்து பார்க்கும் போது பந்துவீச்சில் ஏகப்பட்ட திருப்புமுனைகள் ஏற்படலாம் எனத் தெரிகிறது. ஆனால் பேட்ஸ்மேன்களுக்கு தான் தலைவலி காத்துள்ளது.

போட்டி எப்படி இருக்கும்
முதல் நாளன்று நல்ல வெயில் என்பதால் முதலில் பேட்டிங் செய்யும் அணி அதிரடியாக ஆடி ரன்குவிக்க முயலும், எனினும் சுழற்பந்துவீச்சு அதற்கு முட்டுக்கட்டை போடலாம். 2வது மற்றும் 3வது நாளன்று மழைப்பொழிவு இருக்கும் என்பதால் ஆட்டம் கடைசி நாள் வரை செல்ல அதிக வாய்ப்புள்ளது. எனவே இந்த போட்டியில் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கையே தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications