லண்டன்: லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டம், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று நடைபெறுகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் முன்னிலை பெற இரு அணிகளும் கடுமையாகப் போராடி வரும் நிலையில், இந்தியாவின் வெற்றிக்கு இன்னும் 135 ரன்கள் தேவை, கைவசம் 6 விக்கெட்டுகளே உள்ளன.
நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 58 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இந்தச் சூழலில், போட்டியின் வெற்றி வாய்ப்பு இங்கிலாந்துக்கே அதிகம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.

"மூன்றாம் நாள் ஆட்டத்தின் முடிவில், இந்தப்போட்டியில் இந்திய அணி தோற்பதற்கு வாய்ப்பே இல்லை என உறுதியாக நம்பினேன். ஆனால், தற்போதைய நிலையைப் பார்க்கும்போது, ஆட்டம் இங்கிலாந்துக்கு சாதகமாகத் திரும்பியுள்ளது. இங்கிலாந்தின் வெற்றிக்கு 70% வாய்ப்பும், இந்தியாவின் வெற்றிக்கு 30% வாய்ப்பும் இருப்பதாகக் கருதுகிறேன்," என்று மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார்.
இதற்கு முக்கிய காரணமாக அவர் குறிப்பிடுவது, பந்து இன்னும் கடினமாகவும், புதியதாகவும் இருப்பதுதான். "புதிய பந்துக்கு இந்த ஆடுகளம் நன்கு ஒத்துழைக்கிறது. காலையில் இந்திய பந்துவீச்சாளர்கள் புதிய பந்தில் பந்துவீசியபோது என்ன நடந்தது என்பதை நாம் பார்த்தோம். எனவே, இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தவே வாய்ப்பு அதிகம்," என்றார்.
இருப்பினும், இந்தியாவின் வெற்றி வாய்ப்பு முழுமையாக மங்கிவிடவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். "ஒருவேளை, இங்கிலாந்து அணி சுழற்பந்து வீச்சாளர் ஷோயிப் பஷீரை பந்துவீச அழைத்தால், அதன் பொருள் ஆட்டம் இந்தியாவின் பக்கம் உள்ளது என்பதாகும். கே.எல். ராகுலும், ரிஷப் பண்ட்டும் மிகச்சிறப்பாக பேட்டிங் செய்தால் மட்டுமே அது நடக்கும். இந்த இளம் பேட்டிங் வரிசைக்கு இது ஒரு மனரீதியான சவால். இலக்கு சிறியது என்பதால், தேவையில்லாத ரிஸ்க் எடுக்கத் தோன்றும். இந்திய வீரர்கள் நிதானமாக ஆடி, இலக்கை அடைய வேண்டும்," என்று மஞ்ச்ரேக்கர் அறிவுறுத்தியுள்ளார்.