லண்டன்: இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டி முடிவடைந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்லை இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் சீண்டிய வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. இந்தப் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தில் சுப்மன் கில் பேட்டிங் செய்த போது முந்தைய போட்டிகளை போல மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சரியாக ரன் குவிக்காததை வைத்து இழிவுபடுத்தி இருந்தார் பென் டக்கெட்.
முன்னதாக இந்தியாவின் பந்துவீச்சின் போது, இங்கிலாந்து வீரர்களுடன் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்ட இந்திய கேப்டன் சுப்மன் கில், அடுத்து பேட்டிங் செய்ய வந்தபோது இங்கிலாந்து வீரர்களால் குறி வைக்கப்பட்டார். இந்தத் தொடரில் ஏற்கனவே 601 ரன்கள் குவித்திருந்த கில், இங்கிலாந்தில் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

இருப்பினும், மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் சுப்மன் கில் 16 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார். இதை அடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து வீரர் பென் டக்கெட், ஸ்டம்ப் மைக்கில் கில்லின் ரன் குவிப்பை இழிவுபடுத்தும் வகையில் பேசியது பதிவானது. "600 ரன்கள் எடுத்ததே இந்தத் தொடரில் அவருக்குப் போதும். இந்த ஆளுக்கு 600 ரன்களே அதிகம் தான்" என்று டக்கெட் கூறினார். இது கில்லின் பேட்டிங் திறமையைக் குறைத்து மதிப்பிடும் மறைமுகத் தாக்குதலாகக் கருதப்படுகிறது.
இந்த வார்த்தைப் போருக்கு கில் எந்தப் பதிலும் அளிக்கவில்லை என்றாலும், அவர் இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். 193 ரன்கள் என்ற சவாலான இலக்கைத் துரத்திய இந்திய அணி, நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 58 ரன்கள் எடுத்து தடுமாறியது. பின்னர் ஐந்தாம் நாள் அன்று வரிசையாக விக்கெட்களை இழந்து 170 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
லார்ட்ஸ் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து கில் வெறும் 16 ரன்களே எடுத்திருந்தாலும், தொடரின் ஆரம்ப இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஒரு இரட்டை சதம் உட்பட மூன்று சதங்களை அடித்து, எட்ஜ்பாஸ்டனில் இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார்.