லண்டன்: இந்தியா,இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கின்றது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளதால், இந்த போட்டியில் யார் வெல்கிறார்களோ அவர்களுக்கு தொடரை கைப்பற்றும் வாய்ப்பு சிறப்பாக இருக்கும்.
இந்த சூழலில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 387 ரன்கள் எடுத்தது. இதை அடுத்து இந்தியா அணியும் முன்னிலை பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர்களும் 387 ரன்களில் ஆட்டம் இழந்தனர்.

இதனால் இரு அணியும் முதலில் சமனில் இருந்தது. இந்த சூழலில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 192 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதை அடுத்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி கடைசி இன்னிங்சில் விளையாடியது. குறைந்த இலக்கையே துரத்த வேண்டும் என்பதால் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு இருந்ததாக ரசிகர்கள் நம்பினர்.
ஆனால் இந்த வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பை இந்திய வீரர்கள் வீணடித்து வருகின்றனர். ஜெய்ஸ்வால் டக்அவுட் ஆகியும் கருண் நாயர் 14 ரன்களிலும், கேப்டன் கில் 6 ரன்களிலும்,ஆகாஷ் தீப் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 58 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறது. இந்த நிலையில் இந்திய அணியின் வெற்றிக்கு 135 ரன்கள் தேவைப்பட இங்கிலாந்து அணி வெற்றிக்கு வெறும் ஆறு விக்கெட்டுகள் தான் உள்ளது.
ஆடுகளமும் பேட்டிங் செய்ய கடுமையாக இருப்பதால் இங்கிலாந்து வீரர்கள் நம்பிக்கையில் உள்ளனர். எனினும் இந்திய வீரர்கள் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் நிச்சயம் வெற்றி பெறலாம். தற்போது ஐந்தாவது நாளில் இந்தியா வெற்றி பெற வேண்டும் என்றால் ராகுல் தன் வாழ்நாளில் மிக முக்கியமான இன்னிங்ஸ் ஒன்றை ஆட வேண்டும். இதேபோன்று ரிஷப் பன்ட் முதல் இன்னிங்ஸ் இல் நன்றாக விளையாடி முக்கிய கட்டத்தில் விக்கெட்டை பறி கொடுத்தார்.
இதனால் 5வது நாளில் ராகுல், ரிஷப் பன்ட் எவ்வாறு பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடுகிறார்களோ அது பொறுத்துதான் இந்திய அணியின் வெற்றியும் இருக்கின்றது. இதேபோன்று ஜடேஜா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர் போன்ற வீரர்களும் தேவைப்பட்டால் தங்களது வாழ்நாளில் சிறந்த இன்னிங்சை ஐந்தாவது நாளில் வெளிப்படுத்த வேண்டும். ஆப்சைடுக்கு செல்லும் பந்தை தேவையில்லாமல் அடிக்கக்கூடாது. நான்கு விக்கெட்டுகளை இழந்த பிறகும் இந்தியாவிடம் வெற்றி வாய்ப்பு இருக்கத்தான் செய்கிறது. பதற்றம் அடையாமல் பொறுப்புடன் விளையாடினால் நிச்சயம் சாதிக்க முடியும்.