புனே: இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டி சிவம் துபே பேட்டிங் செய்து அரை சதம் அடித்ததற்கு பின்னர் அணியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக வேகப் பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணா அணியில் சேர்க்கப்பட்டார். இந்தப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்த போது சிவம் துபேவின் ஹெல்மெட்டில் பந்து தாக்கியது.
20 வது ஓவரின் போது இந்த சம்பவம் நடந்தது. அந்த ஓவரின் ஐந்தாவது பந்தை சந்தித்தார் சிவம் துபே. அப்போது இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜேமி ஓவர்டன் பவுன்சர் ஒன்றை வீசினார். அதை புல் ஷாட்டாக (Pull shot) அடிக்க முயற்சி செய்தார் சிவம் துபே. ஆனால், பந்து அவரது ஹெல்மெட்டில் தாக்கியது.

அதன் பின் சர்வதேச கிரிக்கெட் அமைப்பின் விதிப்படி அவருக்கு மூளை அழற்சிக்கான பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் அப்போது அவர் தன்னால் பேட்டிங் செய்ய முடியும் என்று கூறினார். இதை அடுத்து அந்த இன்னிங்ஸின் கடைசி பந்தை அவர் சந்தித்தார். அதில் அவர் ரன் அவுட்டும் ஆனார். சிவம் துபே 34 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்து இருந்தார். ஹர்திக் பாண்டியா 30 பந்துகால் 53 ரன்கள் சேர்த்து இருந்தார்.
இதை அடுத்து இந்திய அணி 182 ரன்கள் என்ற இலக்கை இங்கிலாந்து அணிக்கு நிர்ணயித்தது. ஆனால், அப்போது பந்து வீச வந்த இந்திய அணியினருடன் சிவம் துபே களத்துக்கு வரவில்லை. முதலில் ரமன்தீப் சிங் அவருக்கு பதிலாக ஃபீல்டிங் செய்தார். சரியாக ஆறாவது ஓவரின் முடிவில் ஹர்ஷித் ரானா களத்துக்கு வந்தார். அப்போதே பரபரப்பு ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து இந்திய அணியில் மாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. சிவம் துபேவுக்கு மூளை அழற்சி ஏற்பட்டு இருப்பதால் அவருக்கு பதிலாக ஹர்ஷித் ராணா அணியில் சேர்க்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பொதுவாக இது போன்ற மூளை அழற்சி ஒரு வீரருக்கு ஏற்பட்டால் அவர் பாதி போட்டியில் நீக்கப்பட்டு அவருக்கு இணையான ஒரு வீரரை அணியில் சேர்த்துக் கொள்ளலாம் என்ற விதி உள்ளது.
ஆனால், ஹர்ஷித் ராணா என்ற ஒரு முழு நேர வேகப் பந்துவீச்சாளர் சிவம் துபே என்ற பேட்டிங் செய்யும் ஆல் ரவுண்டருக்கு மாற்றாக களமிறக்கப்பட்டது சரியா என்ற கேள்வி எழுந்தது. ஹர்ஷித் ராணா இன்னிங்ஸ்-இன் 12 வது ஓவரை வீசி ஒரு விக்கெட்டையும் சாய்த்தார். அவருக்கு இதுவே அறிமுக போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் அவர் வீசிய 14வது ஓவரில் இங்கிலாந்து அணி 18 ரன்கள் குவித்தது.