
சிறப்பான தொடக்கம்
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4வது டி20 போட்டி நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் குவித்தது. சிறப்பாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 57 ரன்களும், ஸ்ரேயாஸ் 37 ரன்களும் எடுத்தனர்.

ராய் அதிரடி
186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஜேசன் ராய் நல்ல தொடக்கம் அளித்தார். ஆனால் அவருக்கு பார்ட்னர்ஷிப் அமையாதது இங்கிலாந்து அணிக்கு பின்னடைவாக போனது. தொடக்க வீரர் பட்லர் 9 ரன்களும், மாலன் 14, பேர்ஸ்டோ 25 ரன்களும் எடுத்து வெளியேறினர். தனி ஆளாக தொடக்கத்தில் இருந்து போராடிய ராய், 27 பந்துகளில் 40 ரன்களை விளாசினார்.

விலகல்
பின்னர் களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ் பந்தை மைதானத்தின் அனைத்து பக்கங்களிலும் சிதறடித்தார். ஒரு கட்டத்தில் ஸ்டோக்ஸின் ஆட்டத்தால் இங்கிலாந்து அணி எளிதாக வென்றுவிடும் என்று சென்றது. இந்நிலையில் இந்த போட்டியின்போது 17வது ஓவரில் கேப்டன் கோலி மைதானத்தில் இருந்து வெளியேறினார். இதனால் இறுதிகட்டத்தில் ரோகித் சர்மா பொறுப்பை எடுத்துக்கொண்டு இந்திய அணியை வெற்றி பெற செய்தார். கோலி திடீரென காணாமல் போனது குறித்து இணையத்தில் கேள்விகள் எழுந்து வந்தன.

விளக்கம்
இந்நிலையில் அதற்கு கோலி விளக்கம் அளித்துள்ளார். அதில், ஃபீல்டிங்கின் போது உள்வட்டத்தில் டைவ் அடித்து பந்தை தடுத்தேன். இதனால் எனக்கு கால் மூட்டியில் சிறிது காயம் ஏற்பட்டது. தொடர்ந்து ஆடி காயத்தை பெரிதாக்க நான் விரும்பவில்லை. எனவே ஆட்டத்தில் இருந்து வெளியேறினேன். ஏனென்றால் அடுத்து முக்கியமான போட்டிகள் உள்ளன. 5வது போட்டிக்கு தயாராகிவிடுவேன். இது அவ்வளவு பெரிய சீரியஸான விஷயம் அல்ல என தெரிவித்தார்.

வம்பிழுக்கும் வாகன்
இதுகுறித்து இணையத்தில் விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில் மைக்கேல் வாகன் கோலியை வம்பிழுத்துள்ளார். இதுகுறித்து ட்வீட் செய்த அவர், 4வது டி20 போட்டியில் கோலி சிறந்த கேப்டன்சி செய்துள்ளார். இக்கட்டான நேரத்தில்மட்டும் ரோகித் சர்மாவிடம் அணியை ஒப்படைத்து விட்டு நல்ல யுக்தி மேற்கொண்டுள்ளார் என கிண்டல் அடித்துள்ளார். இதற்கு கோலி சரியான பதிலடி கொடுப்பாரா என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications