மான்செஸ்டர்: மான்செஸ்டரில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில், இந்திய வீரர் ரிஷப் பண்ட் உடைந்த கால்விரலுடன் பேட்டிங் செய்த சம்பவம் ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம், அவரது காயத்தை குறிவைத்து இங்கிலாந்து வீரர்கள் செயல்பட்ட விதம் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில், கிறிஸ் வோக்ஸ் வீசிய யார்க்கர் பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் செய்ய முயன்றபோது, பண்ட்டின் வலது கால்விரலில் பலமாக தாக்கியது. வலியால் துடித்த அவர், களத்தை விட்டு வெளியேறினார். பின்னர் எடுக்கப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில், கால்விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது உறுதியானது. இதனால், அவர் தொடரில் இருந்து விலகுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது, அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக வலியையும் பொருட்படுத்தாமல் களமிறங்கினார் ரிஷப் பண்ட். ஷர்துல் தாக்கூர் ஆட்டமிழந்ததும், மிகுந்த சிரமத்துடன் நடந்து வந்து பேட்டிங் செய்தார். ஏற்கனவே 37 ரன்கள் எடுத்திருந்த அவர், காயத்துடன் களமிறங்கி மேலும் 17 ரன்களை சேர்த்து அரைசதம் அடித்து அசத்தினார். அவரது இந்த துணிச்சலான செயலுக்கு ரசிகர்கள் பலத்த கரவொலி எழுப்பி ஆதரவு தெரிவித்தனர். இறுதியில், ஜோஃப்ரா ஆர்ச்சரின் அபாரமான பந்துவீச்சில் 54 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ரிஷப் பண்ட்டின் இந்த வீரதீர செயலை ஒருபுறம் ரசிகர்கள் கொண்டாடினாலும், மறுபுறம் இங்கிலாந்து அணியின் செயல்பாடு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இங்கிலாந்து வீரர்கள், பண்ட்டின் காயமடைந்த காலையே குறிவைத்து தொடர்ந்து பந்து வீசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக ஒரு சமயம், இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், வேகப் பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சரிடம் சில ஆலோசனைகளை அளித்தார். அதற்கு அடுத்து ஆர்ச்சர் வீசிய பந்து பண்ட்டின் உடைந்த விரலை குறி வைத்து யார்க்கராக சென்றது.
"விளையாட்டு உணர்வு (Spirit of the Game)" பற்றி அடிக்கடி பேசும் இங்கிலாந்து அணி, காயமடைந்த ஒரு வீரரிடம் இப்படி நடந்துகொள்வது சரியா? என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கடுமையாக கேள்வி எழுப்பி வருகின்றனர். கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல் ரிஷப் பண்ட்டின் விரலை மேலும் காயத்துக்கு உள்ளாக்கி அதன் மூலம் அவர் இந்த தொடரில் இருந்தும், அடுத்த சில மாதங்களுக்கும் கிரிக்கெட் ஆடாமல் இருக்க வேண்டும் என இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஆர்ச்சர் செயல்பட்டதை போல் இருந்ததாகவும் ரசிகர்கள் குற்றம் சுமத்தி உள்ளனர்.
போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 358 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து தரப்பில் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி, இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் எடுத்துள்ளது. போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ரிஷப் பண்ட்டின் காயம் மற்றும் இங்கிலாந்து அணியின் அணுகுமுறை குறித்த விவாதங்கள் கிரிக்கெட் வட்டாரத்தில் சூடுபிடித்துள்ளன.