மான்செஸ்டர்: கிரிக்கெட் உலகில் 'ஜென்டில்மேன்'ஸ் கேம்' என்று தங்களை அழைத்துக்கொள்ளும் இங்கிலாந்து அணியின் மீது, தற்போது பந்தை சேதப்படுத்தியதாக (Ball Tampering) ஒரு கடுமையான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தியாவுக்கு எதிரான மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியின்போது, இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் பிரைடன் கார்ஸ் பந்தை கால்களால் மிதித்து சேதப்படுத்தியது கேமராவில் அப்பட்டமாகப் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் கிரிக்கெட் உலகில் விவாதமாக மாறியது.
போட்டியின் நான்காம் நாளில், இந்திய கேப்டன் சுப்மன் கில், கார்ஸ் வீசிய 12வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளை விளாசினார். இதனால் ஏற்பட்ட விரக்தியில், தனது ஃபாலோ-த்ரூவில் பந்தை காலால் தடுத்த கார்ஸ், வேண்டுமென்றே தனது ஸ்பைக்ஸ் காலணிகளால் பந்தின் மீது ஏறி நின்றார். பந்துவீச்சாளர்கள் பந்தை காலால் தடுப்பது இயல்புதான் என்றாலும், கார்ஸின் செயல் பந்தின் தன்மையை மாற்றுவதற்கான அப்பட்டமான முயற்சியாகவே பார்க்கப்பட்டது. புதிய டியூக்ஸ் பந்து ஸ்விங் ஆகாததால், பந்தின் ஒரு பக்கத்தை சொரசொரப்பாக்கி, அதன் மூலம் ரிவர்ஸ் ஸ்விங் செய்வதே கார்ஸின் நோக்கமாக இருந்தது என்பது தெளிவாகத் தெரிந்தது.

ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்காக வர்ணனை செய்துகொண்டிருந்த ஆஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பாண்டிங், இந்த சம்பவத்தை உடனடியாகக் கவனித்துவிட்டார். "பிரைடன் கார்ஸின் கடைசி ஓவரில் இது நடந்துள்ளது. அவர் தனது ஃபாலோ-த்ரூவில் பந்தை நிறுத்துகிறார், பின்னர், பந்தின் பளபளப்பான பக்கத்தில் தனது ஸ்பைக்ஸால் அழுத்துகிறார்" என்று நேரலையில் குறிப்பிட்டார். பாண்டிங்கின் இந்த கருத்து, இந்த விவகாரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியது.
கிரிக்கெட்டில் பந்தை சேதப்படுத்துவது என்பது மிகப்பெரிய குற்றங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் போன்ற வீரர்கள் இந்த குற்றத்திற்காக கடுமையான தண்டனைகளை சந்தித்த வரலாறை மறக்க முடியாது. இந்நிலையில், கிரிக்கெட்டின் விதிகளைப் பற்றி அதிகம் பேசும் இங்கிலாந்து அணியே இந்த சர்ச்சையில் சிக்கியிருப்பது, அவர்களின் இரட்டை வேடத்தை காட்டுவதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
போட்டியின் அம்பயர்கள் இந்த சம்பவம் குறித்து இங்கிலாந்து அணியை எச்சரித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், அம்பயர்கள் இதை குற்றமாவோ,, விதிமீறலாகவோ எடுத்துக் கொள்ளவில்லை என்பதும் விவாதமாகி உள்ளது.
நான்காவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில், இங்கிலாந்து அணி நிர்ணயித்த இமாலய இலக்கை துரத்தும் இந்திய அணி, பெரும் போராட்டத்திற்குப் பிறகு சற்று நம்பிக்கையுடன் உள்ளது. இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில், கேப்டன் பென் ஸ்டோக்ஸின் அபாரமான 141 ரன்களின் உதவியுடன் 669 ரன்கள் குவித்து, இந்தியாவிற்கு 311 ரன்கள் முன்னிலை பெற்றது.
பெரும் பின்னடைவில் இருந்து தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி, கிறிஸ் வோக்ஸின் அபார பந்துவீச்சில் முதல் ஓவரிலேயே யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்து 0 ரன்களுக்கு 2 விக்கெட் எனத் தடுமாறியது. இருப்பினும், அதன் பிறகு ஜோடி சேர்ந்த கேப்டன் சுப்மன் கில் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, நாள் முழுவதும் விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டனர்.
நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்துள்ளது. கில் 78 ரன்களுடனும், ராகுல் 87 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி இன்னும் 137 ரன்கள் பின்தங்கியுள்ள நிலையில், போட்டியின் கடைசி நாளில் ஆட்டத்தை டிரா செய்வதற்கான வாய்ப்பு உள்ளது.