மான்செஸ்டர்: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் 2-1 என்ற நிலையில் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் மான்செஸ்டரில் நான்காவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. இந்தப் போட்டிதொடரை சமன் செய்ய இந்திய அணிக்கு வாழ்வா சாவா போராட்டமாகும். இந்த முக்கியமான போட்டியில், இந்திய அணியின் ஆடும் லெவனில் யாருக்கு இடம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எகிறி இருந்தது.
குறிப்பாக கருண் நாயர் இடம் பெறுவாரா? என எதிர்பார்த்த நிலையில், அவர் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சாய் சுதர்சன் மூன்றாம் வரிசை பேட்ஸ்மேனாக சேர்க்கப்பட்டுள்ளார். இதை அடுத்து கருண் நாயரின் சர்வதேச கிரிக்கெட் வாழ்வு முடிவுக்கு வந்து விட்டதாக ரசிகர்கள் மத்தியில் பேசப்படுகிறது.
சுமார் 8 ஆண்டுகள் என்ற நீண்ட நெடிய காத்திருப்புக்குப் பிறகு, "டியர் கிரிக்கெட், எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடு" என்று சமூக வலைதளத்தில் உருக்கமாகக் கோரி, மீண்டும் இந்திய டெஸ்ட் அணிக்குத் திரும்பியவர் கருண் நாயர். உள்ளூர் போட்டிகளிலும், இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் சதங்களையும், இரட்டை சதத்தையும் விளாசி, தனது திறமையை மீண்டும் நிரூபித்து அணிக்குள் நுழைந்தார். இந்த கம்பேக், இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் ஒரு உணர்ச்சிகரமான தருணமாகப் பார்க்கப்பட்டது.

ஆனால், இந்த கனவு கம்பேக் அவர் எதிர்பார்த்தது போல் அமையவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான நடப்பு தொடரில் அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டன. ஆனால், முச்சதம் அடித்த அந்த பழைய கருண் நாயரை களத்தில் காண முடியவில்லை. இதுவரை ஆடிய 6 இன்னிங்ஸ்களில் வெறும் 131 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். ஒருமுறை கூட அரைசதத்தை கடக்காதது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. குறிப்பாக, லார்ட்ஸில் நடந்த மூன்றாவது டெஸ்டில், முக்கியமான நேரத்தில் பந்தை தவறாகக் கணித்து ஆட்டமிழந்தது, அணியின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது.
கருண் நாயர் தனது இன்னிங்ஸை நன்றாகத் தொடங்குகிறார், ஆனால் அதை பெரிய ஸ்கோராக மாற்ற முடியவில்லை. 20, 30 ரன்களில் ஆட்டமிழப்பது தொடர்கதையானது. இது அவரது தன்னம்பிக்கையை குலைத்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்புவதில் உள்ள அழுத்தம் அவரைத் தற்காப்பு மனநிலைக்குத் தள்ளியிருக்கலாம் என்று அவரது விதர்பா அணி பயிற்சியாளர் உஸ்மான் கனி கூறி இருந்தார்.
கருண் நாயரின் இந்த ஃபார்ம் இந்திய அணி நிர்வாகத்திற்கு கவலையை ஏற்படுத்தியது. அவரது இடத்தில் களமிறங்க இளம் வீரர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். குறிப்பாக, தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரர் சாய் சுதர்சன் இருக்கிறார். முதல் டெஸ்டில் அறிமுகமாகி, இரண்டாவது இன்னிங்ஸில் 30 ரன்கள் எடுத்த அவருக்கு, அதன்பிறகு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஒரு இடது கை பேட்ஸ்மேனான சாய் சுதர்சனை களமிறக்குவது, அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என கிரிக்கெட் வல்லுநர்கள் கூறினர். இந்த நிலையில் தான் கருண் நாயர் நீக்கப்பட்டு சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.