
காப்பாற்றிய கோலி, ஷர்துல்
இந்த நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் விளையாடிய இந்தியா, 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ரோஹித் ஷர்மா 11 ரன்களிலும், லோகேஷ் ராகுல் 17 ரன்களிலும் அவுட்டானார்கள். பிறகு, புஜாரா 31 பந்துகளை சந்தித்து 4 ரன்கள் மட்டும் எடுத்து ஆண்டர்சன் பந்தில் எட்ஜ் ஆகி கீப்பர் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதன் பிறகு, முதன் முறையாக 5வது வீரராக களமிறக்கப்பட்ட ஜடேஜா, 10 ரன்களில் வெளியேறினார். இதன் பிறகு கேப்டன் விராட் கோலி அரைசதம் அடித்தாலும், 50 ரன்னில் ஓலே ராபின்சன் ஓவரில் எட்ஜ் ஆகி வெளியேறினார். பிறகு துணை கேப்டன் 14 ரன்களிலும், ரிஷப் பண்ட் 9 ரன்களிலும் வெளியேற, இந்தியா 127 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. பிறகு யாரும் எதிர்பார்க்காத வகையில் சிறப்பாக விளையாடிய ஷர்துல் தாகூர், 36 பந்துகளை சந்தித்த ஷர்துல் 57 ரன்களை விளாசினார். இதில், 3 சிக்ஸர்களும், 7 பவுண்டரிகளும் அடங்கும். 8வது விக்கெட்டுக்கு ஷர்துல் தாகூர் - உமேஷ் யாதவ் பார்ட்னாட்ஷிப் 63 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து தரப்பில் க்றிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டுகளும், ஓலே ராபின்சன் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

பரிதாப நிலை
இந்த முதல் நாளில், பிட்ச் ஃபாஸ்ட் பவுலர்கள் சொர்க்கபுரியாக இருந்தது. பந்துகள் அற்புதமாக ஸ்விங் ஆகின. அதனை இங்கிலாந்து பவுலர்கள் பக்காவாக பயன்படுத்திக் கொண்டனர். பேட்ஸ்மேன்களில் விராட் கோலியைத் தவிர, வேறு எவராலும் பெரிய அளவில் தாக்கம் ஏற்படுத்த முடியவில்லை. இறுதியில் ஷர்துல் தாகூர் அடிக்காமல் போயிருந்தால், இந்தியாவின் நிலைமை இன்னும் பரிதாபகரமான நிலைக்கு சென்றிருக்கும். அவர் அடித்ததால் தான், இந்தியா அட்லீஸ்ட் 191 ரன்களாவது அடிக்க முடிந்தது.

வேகம் இல்லை
ஆனால், நேற்று 2ம் நாள் ஆட்டத்தில், பந்துவீச்சில் அந்த அளவுக்கு ஸ்விங் இல்லை. வேகமும் இல்லை. இங்கிலாந்து 62 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த போதிலும், அந்த அணி 290 ரன்களை அடித்துவிட்டது. அதற்கு முக்கிய காரணம் பிட்ச் ஸ்லோவாக மாறிக் கொண்டிருப்பதால் தான். ஏற்கனவே, இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பாகவே, லண்டன் ஓவல் பிட்சின் கடைசி இரண்டு நாட்கள் ஸ்பின்னர்களுக்கு ஒத்துழைக்கும் என்று கூறப்பட்டிருந்தது. அதை மெய்ப்பிக்கும் வகையில், இப்போது பக்காவாக பிட்ச் அதன் தன்மையில் இருந்து உருமாறி வருகிறது.

பறந்த பவுண்டரிகள்
இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் இது குறித்து கூறுகையில், "இரண்டாம் நாள் ஆட்டத்தின் முதல் 40 நிமிடங்களுக்கு பிறகு, பிட்ச் பந்துவீச்சாளர்களுக்கு துளி கூட ஒத்துழைக்கவில்லை. மாறாக, பேட்ஸ்மேன்களுக்கு ஆதரவாக இருந்தது. அவர்களால் விரைவாக ரன்கள் குவிக்க முடிந்தது. எட்டு ஓவர்களில் 40 - 45 ரன்கள் அடித்துவிட்டார்கள். பவுலர்கள் அதிக பவுலர்கள் கொடுக்கும் நிலை ஏற்பட்டதற்கு பிட்சும் ஒரு காரணம்" என்று கூறியிருந்தார்.

கேள்விக்குறி
இரண்டாவது நாளிலேயே இந்த நிலை என்றால், மூன்றாவது நாளின் நிலை என்ன? நான்காவது மற்றும் கடைசி நாளில் எப்படியிருக்கும் என்பது கேள்விக்குறியே. இதற்கு மற்றொரு சான்று, இன்று இந்தியா 2வது இன்னிங்ஸ் ஆட்டத்தை, 3வது நாளில் சிறப்பாக விளையாடி வருவது தான். இரண்டு, மூன்று கேட்ச் வாய்ப்புகளை இங்கிலாந்து தவறவிட்டிருந்தாலும், இந்தியா தனது முதல் விக்கெட்டை 83வது ரன்னில் தான் இழந்தது. அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ராகுல், 46 ரன்களில் ஆண்டர்சன் ஓவரில் எட்ஜ் ஆகி கீப்பர் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

ஸ்பின்னுக்கு ஒத்துழைப்பு
ஒருவேளை, இதன் பிறகும் இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடினால், 200 ரன்கள் முன்னிலை வரை செல்லலாம். அப்படி 200 ரன்கள் வரை முன்னிலை பெறும் பட்சத்தில், இந்தியா போராடிப் பார்க்கலாம். ஆனால், அதற்கு இந்தியாவின் மிடில் மற்றும் லோ ஆர்டர் ஒழுங்காக விளையாட வேண்டும். அட்லீஸ்ட் தலைக்கு 30 ரன்கள் அடித்தால் போதும். அப்படி, இப்படி என 200 - 220 ரன்கள் முன்னிலை பெறலாம். பிட்சும் தன்மை இழந்து, பேட்ஸ்மேன்களுக்கு ஆதரவாக மாறி வருகிறது. பேட்ஸ்மேன்களுக்கு ஆதரவாக என்பதை விட, ஸ்பின்னுக்கு ஒத்துழைப்பு கொடுக்கத் தொடங்குகிறது எனலாம். இப்போது கூட, மொயீன் அலி பந்து வீச வந்த முதல் ஓவரிலேயே, ரோஹித் ஷர்மாவுக்கு எல்பிடபிள்யூ அப்பீல் கேட்கப்பட்டது. தொடர்ந்து மொயீன் அலி பந்து வீசியும் வருகிறார். பந்து அபாரமாக ஸ்பின் ஆகிறது. ஜடேஜா இதனைப் பயன்படுத்தி, 2ம் இன்னிங்ஸில் சற்று சிறப்பாக பந்து வீசினால், இந்தியாவை வெற்றிப் பெறக் கூட வாய்ப்புள்ளது. ஆனால், அதற்கு முதலில் இந்திய பேட்ஸ்மேன்கள், இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக விளையாட வேண்டும்.


Click it and Unblock the Notifications











