லண்டன்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மான்செஸ்டர் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தாலும், கடைசி நேரத்தில் நடந்த "கைகுலுக்கல் சர்ச்சை" கிரிக்கெட் உலகில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இந்த நிலையில், இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸின் செயலை ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் நாதன் லியோன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில், ஆட்டம் டிராவை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்போது இந்திய வீரர்கள் ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சதத்தை நெருங்கிக் கொண்டிருந்தனர். ஜடேஜா 89 ரன்களுடனும், சுந்தர் 85 ரன்களுடனும் களத்தில் இருந்தபோது, இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆட்டத்தை டிராவில் முடித்துக் கொள்ளலாம் எனக் கூறி கைகுலுக்க முன்வந்தார்.

ஆனால், தங்களது தனிப்பட்ட மைல்கல்லை எட்டும் முயற்சியில் இருந்த இந்திய வீரர்கள் அதனை ஏற்க மறுத்து, தொடர்ந்து பேட்டிங் செய்தனர். இதனால் விரக்தியடைந்த பென் ஸ்டோக்ஸ் மற்றும் சில இங்கிலாந்து வீரர்கள், இந்திய வீரர்களைச் சீண்டும் வகையில் பேசத் தொடங்கினர். இந்தச் சம்பவம் கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலானோர், ஜடேஜா மற்றும் சுந்தரின் செயலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்தச் சர்ச்சை குறித்து மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணியின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நாதன் லியோன், இங்கிலாந்து அணியின் நடத்தையைக் கடுமையாகச் சாடினார். அவரிடம் இதுபற்றி கேட்டபோது, "அவர்களை அவுட் ஆக்குங்கள். சதம் அடிக்க விடாதீர்கள்" என்று ஒரே வரியில் சுருக்கமாகவும், நச்சென்றும் பதிலளித்தார். இங்கிலாந்து பந்துவீச்சாளர்களால் விக்கெட் எடுக்க முடியாததை அவர் கிண்டல் செய்ததாக கருதப்படுகிறது.
மேலும், மான்செஸ்டர் ஆடுகளத்தின் தன்மையையும் லியோன் விமர்சித்தார். "டெஸ்ட் கிரிக்கெட் என்பது பேட்டிற்கும் பந்திற்கும் இடையேயான ஒரு சிறந்த போட்டியாக இருக்க வேண்டும். ரசிகர்கள் அதைக் காணவே விரும்புகிறார்கள். கடந்த வாரம் மான்செஸ்டரில் நடந்ததைப் பார்க்க யாரும் விரும்ப மாட்டார்கள்" என்று அவர் கூறினார். ஐந்து நாட்கள் முழுமையாக நடந்தும் வெறும் 24 விக்கெட்டுகள் மட்டுமே விழுந்தது குறிப்பிடத்தக்கது.
பென் ஸ்டோக்ஸின் இந்தச் செயல்பாடு, கிரிக்கெட் உலகில் அவருக்கெதிரான விமர்சனங்களை அதிகரித்துள்ளது. தனிப்பட்ட சாதனைகளுக்காக ஆடுவதை விரும்பாதவர் என்று தன்னைத் தானே கூறிக்கொள்ளும் ஸ்டோக்ஸ், இந்திய வீரர்கள் சதம் அடிப்பதைத் தடுக்க முயன்றது இரட்டை வேடம் என்று பலரும் சாடுகின்றனர். இங்கிலாந்து அணி தார்மீக ரீதியாக உயர்ந்தவர்கள் போல் காட்டிக்கொள்வதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
தற்போது ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபி தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ள கடைசி டெஸ்டில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய இந்தியா போராடும்.