மும்பை: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய ஐந்தாவது டி20 போட்டியில் யுவராஜ் சிங்கின் மாணவரான அபிஷேக் சர்மா அதிரடியாக ஆடி 37 பந்துகளில் சதம் அடித்து அதிர வைத்தார். 13 சிக்ஸ் மற்றும் 7 ஃபோர் அடித்து இருந்தார். தனது குரு யுவராஜ் சிங்கின் பரம எதிரி அணியான இங்கிலாந்தை அபிஷேக் சர்மா தன் பங்கிற்கு வெளுத்து வாங்கினார்.
2007 டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணியின் ஆண்ட்ரூ ஃபிளின்டாப் யுவராஜ் சிங்கை பார்த்து திட்டியதால் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸ் அடித்து அதற்கு பதிலடி கொடுத்தார் யுவராஜ் சிங். அப்போது இருந்தே இங்கிலாந்து அணி என்றாலே யுவராஜ் சிங் ஆறு சிக்ஸ் அடித்தது தான் பலருக்கும் ஞாபகம் வரும்.

சுமார் 18 ஆண்டுகளுக்கு பிறகு யுவராஜ் சிங் இடம் சிறப்பு பயிற்சி பெற்று வரும் அபிஷேக் சர்மா அதே இங்கிலாந்து அணியை வீடு கட்டி அடித்து இருக்கிறார். 54 பந்துகளில் 135 ரன்கள் குவித்து சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ஸ்கோர் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையையும் செய்து இருக்கிறார். இதில் ஒரு நெகிழ்ச்சி சம்பவமும் உள்ளது.
இதற்கு முன் பலமுறை அபிஷேக் சர்மா நல்ல துவக்கம் அளித்தும் அதை சதமாக மாற்றாமல் விக்கெட்டை இழந்து இருக்கிறார். அப்போதெல்லாம் யுவராஜ் சிங் சமூக வலைதளங்களிலேயே அபிஷேக் சர்மாவை கடிந்து கொள்வார். அபிஷேக் சர்மா நீண்ட நேரம் நின்று ரன் குவிக்க வேண்டும் என்பதை பலமுறை வலியுறுத்தி இருக்கிறார்.
இந்த நிலையில் முதன் முறையாக தனது குருவையும் பெருமைப்படுத்தி இருக்கிறார் அபிஷேக் சர்மா. இந்த ஆட்டம் குறித்து யுவராஜ் சிங் தனது சமூக வலைதள பக்கங்களில் பக்கத்தில் பாராட்டு பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில், "அபிஷேக் சர்மா நன்றாக விளையாடினாய். உன்னை இந்த இடத்தில் தான் நான் பார்க்க விரும்புகிறேன். உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன்." என குறிப்பிட்டு இருக்கிறார்.
அபிஷேக் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்ற பிறகு யுவராஜ் சிங் தன் ஆட்டத்தை விரும்புவார் என குறிப்பிட்டு நெகிழ்ந்து இருந்தார். இந்தப் போட்டியில் அபிஷேக் சர்மாவின் ஆட்டத்தால் இந்திய அணி 247 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணியை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி.