மும்பை: இந்திய அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வரலாற்றிலேயே மிக மோசமான தோல்வியை தழுவி உள்ளது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்களை எடுத்தது. 248 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணி 10.3 ஓவர்களில் 97 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
இதன் மூலம், இந்திய அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. இது இங்கிலாந்து அணியின் கிரிக்கெட் வரலாற்றிலேயே மோசமான டி20 தோல்வி ஆகும். அதே சமயம் இந்திய அணிக்கு இது இரண்டாவது மிகப்பெரிய வெற்றி ஆகும்.

முன்னதாக 2023 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. அதுவே இந்திய அணி அதிக வித்தியாசத்தில் பெற்ற டி20 வெற்றி ஆகும். இங்கிலாந்து அணி இந்த மோசமான தோல்வியை அடைய பேட்டிங்கில் அந்த அணியின் அணுகுமுறை மோசமாக இருந்தது தான் காரணம்.
இந்த ஐந்தாவது டி20 போட்டியில் இந்திய அணி 248 ரன்களை இலக்காக நிர்ணயித்த நிலையில், இங்கிலாந்து அணி அதை அவசர கதியில் எட்ட முயற்சி செய்தது. அந்த அணியின் துவக்க வீரர் ஃபில் சால்ட் மட்டுமே அதிரடியாக ஆடி 23 பந்துகளில் 55 ரன்கள் சேர்த்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.
ஒரு கட்டத்தில் இந்திய அணியின் பகுதி நேர பந்துவீச்சாளர்களான சிவம் துபே மற்றும் அபிஷேக் சர்மா தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தி இங்கிலாந்து அணிக்கு அழுத்தம் கொடுத்தனர். முகமது ஷமி 2.3 ஓவரில் 25 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
வருண் சக்கரவர்த்தி இரண்டு ஓவர்களில் 25 ரன்கள் விட்டு கொடுத்து இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார். ரவி பிஷ்னோய் ஒரு ஓவர் வீசி ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இந்திய பந்துவீச்சாளர்களுக்கு விக்கெட்கள் மிக எளிதாகவே கிடைத்தன. அந்த அளவுக்கு இங்கிலாந்து வீரர்கள் வாரி வழங்கினர். வெறும் 10.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இங்கிலாந்து அணி 97 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.