மும்பை: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோத உள்ள ஐந்தாவது டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டி நடைபெற உள்ள பிட்ச் குறித்து அதிக எதிர்பார்ப்பு உள்ளது. பொதுவாக வான்கடே மைதானத்தில் பேட்டிங் செய்ய எளிதான பிட்ச் இருக்கும்.
அங்கு இதுவரை நடந்து இருக்கும் 8 சர்வதேச டி20 போட்டிகளில் முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 191 என்பதாக உள்ளது. அதே சமயம் அங்கு வேகப் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான சூழ்நிலையும் நிலவும். குறிப்பாக புதிய பந்தில் பவுலிங் செய்யும் போது அதிக ஸ்விங் மற்றும் ஸீம் இருக்கும்.

எனவே, பேட்டிங் செய்யும் அணி முதல் சில ஓவர்கள் விக்கெட் இழக்காமல் ஆடுவதில் கவனம் செலுத்த வேண்டும். பவர் பிளே ஓவர்களை கடந்து விட்டால் அதன் பிறகு அதிரடியாக ஆடலாம். அந்த மைதானத்தில் இதுவரை சேஸிங் செய்த அணிகளே அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளன.
எனவே, டாஸ் வெல்லும் அணி நிச்சயமாக முதலில் பந்து வீசவே முடிவு செய்யும். அதுவே சிறந்த முடிவாகவும் இருக்கும். இந்த போட்டி நடைபெற உள்ள வான்கடே மைதானப் பகுதிகளில் போட்டி நாள் அன்றும், போட்டி நேரத்திலும் மழை பெய்ய வாய்ப்பு இல்லை என வானிலை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டு இருக்கிறது.
போட்டியின் இரண்டாம் பகுதியில் காற்றில் உள்ள ஈரப்பதத்தின் காரணமாக பவுலிங் செய்யும் அணிக்கு சிக்கல் ஏற்படும். அதனாலேயே அந்த மைதானத்தில் சேஸிங் செய்வது எளிதான விஷயமாக பார்க்கப்படுகிறது.
இந்திய அணியில் முகமது ஷமிக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அவர் இந்த தொடரில் இது வரை ஒரு போட்டியில் மட்டுமே ஆடி இருக்கிறார்.
இந்த தொடரில் இதுவரை நடந்து இருக்கும் நான்கு போட்டிகளில் மூன்று போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி உள்ளது. இங்கிலாந்து அணி ஐந்தாவது போட்டியில் ஆறுதல் வெற்றி பெற முயற்சிக்கும். அதே சமயம், டி20 போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் இந்திய அணி அதை தொடர திட்டமிடும்.