மும்பை: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் பல்வேறு மாற்றங்கள் இருக்கும் என இந்திய அணி வட்டாரத்திலிருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன. மூத்த வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி இந்த போட்டியில் நிச்சயம் ஆடுவார் என கூறப்படுகிறது.
இதுவரை நடந்த 4 போட்டிகளிலும் இந்திய அணியில் ஒரு முழு நேர வேகப் பந்துவீச்சாளர் மட்டுமே பிளேயிங் லெவனில் இடம் பிடித்து வந்த நிலையில் ஐந்தாவது போட்டியில் இரண்டு முழு நேர வேகப் பந்து வீச்சாளர்கள் அணியில் இருப்பார்கள் எனவும் கூறப்படுகிறது. அதன் படி முகமது ஷமியுடன் அர்ஷ்தீப் சிங் அல்லது ஹர்ஷித் ராணா இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளது.

அடுத்து நான்காவது டி20 போட்டியின் போது தலையில் பந்து தாக்கியதால் பாதி போட்டியில் விலகிய சிவம் துபேவுக்கு ஐந்தாவது போட்டியில் வாய்ப்பு கிடைப்பது கடினம் என கூறப்படுகிறது. மூளை அதிர்ச்சி ஏற்பட்டதால் அதில் இருந்து மீண்டு வர சில நாட்கள் ஆகலாம் என்பதால் அவருக்கு பதிலாக ரமன்தீப் சிங் அல்லது துருவ் ஜுரல் அணியில் இடம் பெற வாய்ப்பு உள்ளதாக முதற் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிவம் துபேவின் உடல்நிலையை பொறுத்து இதில் மாற்றம் இருக்கலாம். முதல் பேட்டிங் ஆர்டரில் முதல் ஐந்து வரிசையில் பெரிதாக எந்த மாற்றமும் இருக்காது. சஞ்சு சாம்சன், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் முதல் ஐந்து இடங்களில் பேட்டிங் செய்ய அதிக வாய்ப்பு உள்ளது. இந்தப் போட்டியில் இரண்டு வேகப் பந்துவீச்சாளர்கள் அவசியம் என்பதால் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவி பிஷ்னோய்-க்கு இந்த போட்டியில் இடம் கிடைப்பது கடினமே.
இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன்: சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்டியா, சிவம் துபே / ரமன்தீப் சிங் / துருவ் ஜூரல், ரிங்கு சிங், அக்சர் படேல், வருண் சக்கரவர்த்தி, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங் / ஹர்ஷித் ராணா.
இங்கிலாந்து அணியின் உத்தேச பிளேயிங் லெவன்: ஃபில் சால்ட் (விக்கெட் கீப்பர்), பென் டக்கெட், ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டன், ஜேமி ஓவர்டன், பிரைடன் கார்ஸ், கஸ் அட்கின்சன், அடில் ரஷித், சாகிப் மஹ்மூத்