மும்பை: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய ஐந்தாவது டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் பாதியில் விலகினார். அவருக்கு பதிலாக துருவ் ஜுரல் விக்கெட் கீப்பிங் பணியை மேற்கொண்டார். ஏற்கனவே, நான்காவது டி20 போட்டியில் இதே போல சிவம் துபே பாதியில் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஹர்ஷித் ராணா பவுலிங் செய்தது சர்ச்சையாக மாறி இருந்தது.
இந்த நிலையில் ஐந்தாவது போட்டியிலும் அது போன்ற ஒரு நிலை ஏற்பட்டது. எனினும், சஞ்சு சாம்சனுக்கு பேட்டிங் செய்த போது விரலில் காயம் ஏற்பட்டதாகவும், அதனால் அவரால் விக்கெட் கீப்பிங் பணியை மேற்கொள்ள முடியவில்லை எனவும் விளக்கம் அளிக்கப்பட்டது.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஒரு வீரர் காயம் காரணமாக விக்கெட் கீப்பிங் செய்ய முடியாமல் போனாலோ அல்லது ஃபீல்டிங் செய்ய முடியாமல் போனாலோ அவருக்கு பதிலாக மாற்று வீரரை ஃபீல்டிங் அல்லது விக்கெட் கீப்பிங் செய்ய வைக்கலாம். எனினும், அவர்கள் பவுலிங் மற்றும் பேட்டிங் செய்ய அனுமதி இல்லை.
அதன்படி காயமடைந்த சஞ்சு சாம்சனுக்கு பதில் துருவ் ஜுரலுக்கு கீப்பிங் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. இந்தப் போட்டியில் ஜுரல் இரண்டு போட்டிகளில் பேட்ஸ்மேனாக விளையாடினார். ஆனால், பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை. அதனால் ஐந்தாவது போட்டியில் அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
எனினும், இந்த தொடரில் முதன்முறையாக விக்கெட் கீப்பிங் செய்யும் வாய்ப்பை பெற்றார். அவர் கேட்ச் பிடித்ததன் மூலம் இந்திய அணியின் மூன்று விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தார். இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்த போது சஞ்சு சாம்சன் ஆட்டத்தின் முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்து அதிரடியை துவக்கி வைத்தார். அவர் 7 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து இருந்தார்.
சாம்சன் வெளியேறிய பின்னர் அபிஷேக் சர்மா அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார். அவர் 54 பந்துகளில் 135 ரன்கள் குவித்தார். 13 சிக்ஸ் மற்றும் 7 ஃபோர் அடித்து பல்வேறு சாதனைகளை உடைத்தார். இந்தப் போட்டியில் இந்திய அணி 247 ரன்கள் குவித்தது.
அடுத்து ஆடிய இங்கிலாந்து அணி 10.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 97 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.