மும்பை: சஞ்சு சாம்சன் மோசமாக ஆடுவதை அனுமதிக்க வேண்டும் என பேசி இருக்கிறார் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர். சஞ்சு சாம்சன் சரியாக ரன் குவிக்காத நிலையில் அவருக்கு ஆதரவாக பேசி இருக்கிறார். சஞ்சு சாம்சன் தற்போது இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்த தொடரில் இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளில், சாம்சன் 26, 5, 3 மற்றும் 1 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இந்த தொடருக்கு முன்னதாக சஞ்சு சாம்சன் தான் ஆடிய கடைசி ஐந்து சர்வதேச டி20 போட்டிகளில் மூன்று சதங்கள் அடித்து இருந்தார். அதனால் அவர் மீது அதிக எதிர்பார்ப்புகள் இருந்தன.

சஞ்சய் மஞ்ச்ரேக்கர் சஞ்சு சாம்சன் குறித்து பேசுகையில், சாம்சனைப் போன்ற திறமையான வீரர்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்க வேண்டும் எனவும், அவர்கள் சிறப்பாக விளையாடும்போது எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் கூறி இருக்கிறார்.
சஞ்சு சாம்சன் போன்ற டி20 திறமையாளர்களைப் பார்க்கும்போது, அவர்கள் சிறப்பாக விளையாடும்போது எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்த முடியும், என்ன பங்களிப்பை வழங்க முடியும் என்பதைப் பார்க்க வேண்டும். சஞ்சு சாம்சனைப் பொறுத்தவரை, அவர் நன்றாக விளையாடும்போது அற்புதமான சதம் அடித்து அணியை வெற்றி பெறும் நிலைக்கு கொண்டு செல்கிறார்."
"அதனால், இதுபோன்ற வீரர்கள் தோல்விகளை சந்திக்க அனுமதிக்கப்பட வேண்டும். டி20 கிரிக்கெட்டின் இயல்பே அதுதான். அவர்கள் தங்களை நிலை நிறுத்திக் கொள்ள முடியாது. தொடர்ந்து ரிஸ்க் எடுக்க வேண்டும். அப்படி ரிஸ்க் எடுக்கும்போது ஒரு இன்னிங்ஸ் அவர்களை மீண்டும் ஃபார்முக்கு கொண்டு வரும். சஞ்சு சாம்சனுக்கு அதிக வாய்ப்புகள் கொடுக்க வேண்டும்."
"ஏனென்றால் அவர் ஃபார்முக்கு வந்து நன்றாக விளையாடும்போது, அதன் பலன் கிடைக்கும். இதேபோல, வேறு வீரர் இப்படித் தோல்வியடைந்து, ஃபார்முக்கு வரும்போது 40 அல்லது 50 ரன்கள் எடுத்தால், அவருக்குக் குறைந்த வாய்ப்புகளே கொடுக்கலாம். ஆனால், சஞ்சு சாம்சனின் தற்போதைய ஆட்டத்தைப் பொறுத்தவரை, அவருக்கு நிறைய வாய்ப்புகளை கொடுக்க வேண்டும்," என்று சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பேசினார்.