மும்பை: தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரை பின்பற்றி கேப்டன் சூர்யகுமார் யாதவ் இளம் வீரர்களை கவுரவப்படுத்தும் வகையில் ஒரு விஷயத்தை செய்தார். ரசிகர்கள் அந்த நிகழ்வை சமூக வலைதளங்களில் பகிர்ந்து, சூர்யகுமாரை பாராட்டி வருகின்றனர்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் ஆடிய ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இந்த தொடரில் இந்திய அணி 4 - 1 என தொடரை கைப்பற்றி வெற்றி பெற்று இருந்தது. ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது.

அந்த போட்டியில் இந்திய அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆதிக்கத்தை வெளிப்படுத்தி இருந்தது. போட்டி முடிந்த உடன் இந்திய அணிக்கு கோப்பை வழங்கப்பட்டது. கேப்டன் சூர்யகுமார் யாதவ் கோப்பையை பெற்றுக் கொண்ட பின் செய்த செயல் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை நெகழ்ச்சியில் ஆழ்த்தியது.
இதற்கு முன் தோனி, விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரின் கேப்டன்சியிலும் இதே நடைமுறை நீடித்து இருந்தது. தோனி கேப்டனாக இருந்தபோது ஒவ்வொரு முறையும் கோப்பை வென்ற பிறகு அதை அணியின் இளம் வீரரிடம் வழங்குவதை துவக்கி வைத்தார்.
அதன் மூலம் வந்த இளம் வீரருக்கு அதிக தன்னம்பிக்கை ஏற்படும் என்றும், வெற்றியில் உங்களின் பங்கும் உள்ளது என்பதை உணர்த்தவும், அந்த பெருமையான விஷயத்தை அவர்களும் அனுபவிக்க வேண்டும் என்றும் அவ்வாறு செய்தார் தோனி.

தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகிய பின்னர் விராட் கோலியின் தலைமையில் இந்திய அணி ஆடிய போதும் அதே நடைமுறை தொடர்ந்தது. அதன் பின்னர் ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்ட பிறகும் அந்த நடைமுறை தொடர்ந்தது. தற்போது சூர்யகுமார் யாதவ் இந்திய டி20 அணியின் கேப்டனாக இருக்கும் நிலையில் அவர் ஒவ்வொரு தொடரிலும் இதை செயல்படுத்தி வருகிறார்.
இந்தியா - இங்கிலாந்து டி20 தொடரில் அறிமுகமான ஹர்ஷித் ராணா மற்றும் இளம் வீரர் துருவ் ஜுரல் வசம் வெற்றிக் கோப்பையை வழங்கினார். ஹர்ஷித் ராணா இந்த தொடரின் நான்காவது போட்டியில் அறிமுகம் ஆனார். தனது அறிமுகத்திலேயே மூன்று விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.
இத்தனைக்கும் அவர் இந்திய அணியின் பவுலிங்கின் போது பாதியில் தான் அணியில் மாற்று வீரராக சேர்க்கப்பட்டு இருந்தார். சூர்யகுமார் யாதவ் கேப்டன்சியில் இதுவரை இந்திய அணி எந்த ஒரு டி20 தொடரிலும் தோல்வியடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் இதுவரை 22 போட்டிகளுக்கு இந்திய அணியின் கேப்டனாக இருந்துள்ளார். அதில் இந்திய அணி 18 வெற்றிகளைப் பெற்று இருக்கிறது.