மும்பை: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முடிவில் தொடர் நாயகன் விருதை வென்று இருக்கிறார் வருண் சக்கரவர்த்தி. இந்த தொடரில் மிக சிறப்பாக செயல்பட்ட அவர் மொத்தம் ஐந்து போட்டிகளில் 14 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.
இந்த தொடரில் வருண் சக்கரவர்த்தியின் பவுலிங் சராசரி 9.85 என்பதாக இருந்தது. இதன் மூலம் அவர் மிகப்பெரிய ஆதிக்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ளலாம். அவருக்கு அடுத்ததாக இந்த தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியது இங்கிலாந்து அணியின் பிரைடன் கார்ஸ். அவர் 4 போட்டிகளில் 9 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.

இந்த தொடரில் ஒவ்வொரு போட்டியிலும் விக்கெட்களை வீழ்த்திய வருண் சக்கரவர்த்திக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. அந்த விருதை வாங்கிவிட்டு பேசிய வருண் சக்கரவர்த்தி, "இதுவே எனது சிறந்த பந்துவீச்சாகும். ஆனால் இன்னும் நிறைய முன்னேற வேண்டியது இருக்கிறது." என்றார்.
மேலும், "சரியான பந்தை சரியான நேரத்தில் வீசுவதில் தான் இந்த வெற்றி இருக்கிறது. அதில் நான் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறேன். இந்த விருது எனக்கு கிடைத்தது மிகவும் சிறப்பானது. இந்த விருதை எனது மகன் மற்றும் மனைவிக்கு அர்ப்பணிக்கிறேன், என் பெற்றோருக்கும் அர்ப்பணிக்கிறேன். எனக்கு ஆதரவு அளித்த சூர்யகுமார் யாதவ் மற்றும் கவுதம் கம்பீருக்கு நன்றி கூறிக் கொள்கிறேன்." என்றார் வருண் சக்கரவர்த்தி.
இந்தியா மற்றும் இங்கிலாந்து மோதிய 5 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில் இந்திய அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்றது. 4 - 1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. இந்திய அணி தோல்வி அடைந்த ஒரு போட்டியில் தான் வருண் சக்கரவர்த்தி ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்று சாதனை படைத்து இருந்தார்.
ஐந்தாவது மற்றும் கடைசி போட்டியில் இங்கிலாந்து அணி 97 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 247 ரன்கள் குவித்து இருந்தது. அதன் மூலம் 150 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.