லண்டன்: இந்தியாவிற்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் அனுபவ வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் எஞ்சிய ஆட்டங்களிலிருந்து விலகியுள்ளார். இது, தொடரை வெல்லும் முனைப்பில் இருக்கும் இங்கிலாந்து அணிக்கு ஒரு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின்போது, இந்திய வீரர் கருண் நாயர் அடித்த பந்தை பவுண்டரிக்குச் செல்லாமல் தடுக்க வேண்டி கிறிஸ் வோக்ஸ் டைவ் அடித்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது இடது தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. வலியால் துடித்த அவர், உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேறினார்.
அவரது காயம் மோசமாக இருப்பதால் அவர் ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் மீதமுள்ள நான்கு நாட்கள் ஆட்டத்தில் இருந்தும் நீக்கப்பட்டு இருக்கிறார். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (ECB) இதனை உறுதி செய்துள்ளது. மேலும், இந்தத் தொடர் முடிந்த பிறகே அவரது காயம் குறித்து முழுமையாக ஆய்வு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது. முதல் நாள் ஆட்டத்தில் வோக்ஸ் 14 ஓவர்கள் வீசி 1 விக்கெட்டை வீழ்த்தியிருந்தார்.

வோக்ஸின் இந்த விலகல் இங்கிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. ஏனெனில், அந்த அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஏற்கனவே காயம் காரணமாக இந்த போட்டியில் விளையாடவில்லை. இப்போது வோக்ஸும் வெளியேறியுள்ளதால், இங்கிலாந்தின் பந்துவீச்சு அனுபவம் குறைந்து காணப்படுகிறது.
இந்தத் தொடரின் அனைத்துப் போட்டிகளிலும் விளையாடிய இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களில் வோக்ஸ் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இங்கிலாந்து அணி மீதமுள்ள நான்கு நாட்களிலும் 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலையில் உள்ளது.
ஐந்து போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே தொடரைச் சமன் செய்ய முடியும். முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்திருந்தது.
இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில், இந்திய அணி 224 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. வோக்ஸ் இல்லாதது, இந்த முக்கியமான போட்டியில் இங்கிலாந்து அணியின் வெற்றி வாய்ப்பைப் பாதிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.