லண்டன்: ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் ஐந்தாவது டெஸ்ட் போட்டி இங்கிலாந்தைவிட இந்திய அணிக்குத்தான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏனென்றால் இங்கிலாந்து அணி ஏற்கனவே தொடரில் இரண்டு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்த நிலையில் கடைசி டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முயற்சியில் களமிறங்கியுள்ளது. ஆனால் ஐந்தாவது டெஸ்ட் நடைபெறும் லண்டன் மாநகரத்தில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் ஆட்டம் பாதிக்கப்படுகிறது.

முதல் நாள் ஆட்டத்தில் 90 ஓவர்கள் வீசப்பட வேண்டும். ஆனால் மழை பாதிப்பு காரணமாக வெறும் 64 ஓவர்கள்தான் வீசப்பட்டது. மேலும் வானம் தொடர்ந்து மேகமூட்டத்துடன் காட்சி அளித்ததால், வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக ஆடுகளம் செயல்பட்டது. இதனால் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் தான் எடுத்திருந்தனர்.
இந்த நிலையில் இரண்டாவது நாள் ஆட்டம் முழுமையாக நடைபெறுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. தற்போது வெளியாகி இருக்கும் வானிலை அறிக்கையின் படி லண்டனில் மதியம் 2 மணி வரை மழை அவ்வப்போது குறிக்கிட வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் மதியம் 2 மணிக்கு மேல் வானம் தெளிவாக காட்சியளிக்கும் என குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மேலும் வெப்பநிலை வெறும் 22 டிகிரி வரை தான் இருக்கும் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனால் இரண்டாவது நாள் ஆட்டமும் முதல் நாள் போல் பாதிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. இப்படி ஓவர்கள் முழுமையாக வீசப்படாமல் பாதிக்கப்பட்டால், ஆட்டம் சமனில் முடிய அதிக வாய்ப்பு இருக்கிறது.
அப்படி முடிந்தால் அது இங்கிலாந்து அணிக்கு தான் சாதகமாக இருக்கும். இதனால் முதலில் எப்படியாவது பெரிய ஸ்கோரை அடித்து விட்டு இங்கிலாந்தின் விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்த வேண்டும் என்ற உத்வேகத்தில் இந்தியா உள்ளனர். இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து வீரர் கிறிஸ் வொக்ஸுக்கு காயம் ஏற்பட்டிருப்பது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. தற்போது களத்தில் கருண் நாயர் 52 ரன்களுட்னும், வாஷிங்டன் சுந்தர் 19 ரன்களுடனும் உள்ளனர்.