லண்டன்: இந்தியாவுக்கு எதிரான ஓவல் டெஸ்ட் போட்டியில் வெற்றியின் விளிம்பு வரை சென்று தோல்வியைத் தழுவியது இங்கிலாந்து அணிக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. ஆனாலும், அந்த அணியின் தொடர் நாயகன் ஹாரி புரூக், இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜின் அபாரமான ஆட்டத்தை மனதாரப் பாராட்டியுள்ளார். "சிராஜ் இந்த வெற்றிக்கு முழுத் தகுதியானவர்" என்று அவர் கூறியிருப்பது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் இறுதி நாளில், வெற்றிக்கு 35 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில், இங்கிலாந்து நம்பிக்கையுடன் களமிறங்கியது. நான்காம் நாளில் ஹாரி புரூக் (111) மற்றும் ஜோ ரூட் (105) ஆகியோரின் சதத்தால் இங்கிலாந்து வலுவான நிலையில் இருந்தது. ஆனால், முகமது சிராஜின் அனல் பறக்கும் பந்துவீச்சு, ஆட்டத்தின் போக்கையே தலைகீழாக மாற்றியது. ஐந்தாம் நாளில் 4 விக்கெட் தேவை என்ற நிலையில் சிராஜ் அதில் 3 விக்கெட்களை வீழ்த்தினார். இங்கிலாந்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

போட்டிக்குப் பிறகு பேசிய இங்கிலாந்தின் தொடர் நாயகன் ஹாரி புரூக், "இன்று காலை நாங்கள் மிகவும் நம்பிக்கையுடன் களத்திற்கு வந்தோம். களத்தில் இரண்டு சிறந்த வீரர்கள் இருந்ததால், நாங்கள் எளிதாக வெற்றி பெறுவோம் என்று நினைத்தேன். ஆனால், இந்தியர்கள் கடுமையாகப் போராடினார்கள், குறிப்பாக சிராஜ் பந்துவீசிய விதம் அற்புதமாக இருந்தது. அவர் பெற்ற ஒவ்வொரு வெற்றிக்கும் தகுதியானவர்" என்று கூறினார்.
மேலும், கடைசி நாள் ஆடுகளம் மற்றும் சூழல் குறித்துப் பேசிய அவர், "பந்துவீச்சுக்கு ஆடுகளம் சற்று சாதகமாக இருக்கும் என்று நாங்கள் நினைத்தோம், ஆனால் மேகமூட்டமான வானிலை காரணமாக பந்து அதிகமாக ஸ்விங் ஆனது. நான் முன்பே சொன்னதுபோல், சிராஜ் தொடர்ச்சியாக ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, ஒவ்வொரு பந்தையும் 85 மைல் வேகத்திற்கு மேல் வீசினார். இந்தத் தொடர் அவருக்கு மிகவும் அபாரமாக அமைந்தது, இந்தத் தொடரில் அவர் செய்த சாதனைகளுக்காக நான் அவரை மிகவும் மதிக்கிறேன்," என்று சிராஜுக்குப் புகழாரம் சூட்டினார்.
தனது ஆட்டம் குறித்துப் பேசிய புரூக், "எனது சிந்தனை எல்லாம், எவ்வளவு வேகமாக ரன்களைச் சேர்க்க முடியுமோ அவ்வளவு வேகமாகச் சேர்க்க வேண்டும் என்பதுதான். நானும் ரூட்டும் களத்தில் இருந்தபோது, 40 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் நான் ஆட்டமிழந்திருக்காவிட்டால் ஆட்டம் முடிந்திருக்கும். ஆனால் அது நடக்கவில்லை," என்றார்.
தொடர்ந்து, "இந்தத் தொடர் முழுவதும் பல சரிவுகளை நாங்கள் பார்த்திருக்கிறோம். சில நேரங்களில் நாங்கள் அவர்களை 50 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினோம், சில சமயங்களில் அவர்கள் எங்களை அப்படி வீழ்த்தினார்கள். அதனால், இந்த முடிவு பொருத்தமானதுதான்" என்று குறிப்பிட்டார்.
இந்தத் தோல்வி ஏமாற்றம் அளித்தாலும், டெஸ்ட் கிரிக்கெட்டின் சிறப்பை இந்தத் தொடர் வெளிப்படுத்தியதாக புரூக் கூறினார். "இது ஒரு அற்புதமான தொடர். மிகவும் தீவிரமான தொடராக இருந்தது. ஒவ்வொரு போட்டிக்குப் பிறகும் நாங்கள் முற்றிலும் சோர்ந்து போனோம். நாங்கள் களத்தில் அனைத்தையும் கொடுத்துள்ளோம். நாங்கள் தோல்விப் பக்கத்தில் இருந்தாலும், இது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஒரு சிறந்த விளம்பரம். மக்கள் தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டைப் பார்ப்பார்கள் என்று நம்புகிறேன்" என்று கூறினார்.