லண்டன்: இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டி தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்றால் நான்கு விக்கெட்டுகள் தேவைப்படும்.
அதில் கிறிஸ் வொக்ஸ் பேட்டிங் செய்ய வரவில்லை என்றால் வெறும் 3 விக்கெட் எடுத்தால் போதும். ஆனால் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 35 ரன்கள் தான் தேவைப்படுகிறது. ஐந்தாவது நாளில் 90 ஓவர்கள் என் இருப்பதால் நிச்சயம் போட்டி வெற்றி மற்றும் தோல்வியில்தான் முடிவடையும், தவிர டிராவுக்கு வாய்ப்பு இல்லை.

இந்த நிலையில் களத்தில் இங்கிலாந்து வீரர் ஜெமி ஸ்மித் மற்றும் ஓவர்டன் ஆகியோர் உள்ளனர். தற்போது இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 76 புள்ளி இரண்டு ஓவர்கள் பிடித்திருக்கிறது. இதனால் கடைசி நாளில் தொடங்கியவுடன் இந்தியாவுக்கு ஒரு சிறப்பான ஆயுதம் கிடைக்கப் போகிறது.
80 ஓவர் முடிவடைந்த உடன் புதிய பந்தை எடுத்துக் கொள்ள இந்தியாவுக்கு வாய்ப்பு கிடைக்கும். அதை பயன்படுத்தி வீரர்கள் பந்தை நன்றாக ஸ்விங் செய்தால் நிச்சயம் நெருக்கடி ஏற்படுத்த முடியும். ஆனால் அதற்கு வானமும் மேகமூட்டத்துடன் இருப்பது அவசியமாகும். இதன் காரணமாக இந்திய அணி வீரர்கள் சரியான லைன் மற்றும் லெங்தில் பந்து வீசினால் நெருக்கடி ஏற்படுத்த முடியும்.
ஆனால் பந்து பேட்டிற்கு நன்றாக வருவதற்கும் சில சதவீதங்கள் வாய்ப்பிருக்கின்றது. எனினும் 35 ரன்கள் தான் இருக்கிறது என்பதால் அதனை எளிதாக எட்டி விடலாம் என்ற நம்பிக்கை இங்கிலாந்து வீரர்களுக்கு இருக்கும். அதே சமயம் இந்திய வீரர்கள் இரவு ஓய்வுக்கு பின் மீண்டும் களத்துக்கு வருவதால் அவர்களுக்கும் சோர்வு இருக்காது.
எனினும் நான்காவது நாள் இறுதியில் ஏற்பட்ட பதற்றம் ஐந்தாவது நாளில் ஆரம்பத்தில் இல்லாதது இங்கிலாந்துக்கு சாதகமாக பார்க்கப்படும். இதனால் வெற்றி யாருக்கு கிடைக்கப் போகிறது என்று கணிக்க முடியாத அளவில் ஐந்தாவது டெஸ்ட் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.