லண்டன்: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு, இந்திய அணி 374 ரன்கள் என்ற கடினமான இலக்கை நிர்ணயம் செய்துள்ளது. இந்த நிலையில், இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் டங், தங்களது பேட்டிங் வரிசையை சுட்டிக் காட்டி இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
2022-ல் பிரண்டன் மெக்கல்லம் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றதிலிருந்து, இங்கிலாந்து அணி 'பேஸ்பால்' என்ற புதிய, ஆக்ரோஷமான ஆட்ட யுத்தியைக் கடைப்பிடித்து வருகிறது. இதன் மூலம், நான்காவது இன்னிங்ஸில் கடினமான இலக்குகளைக்கூட வெற்றிகரமாக சேஸிங் செய்வதில் கைதேர்ந்து விளங்குகிறது.

இந்தத் தொடரின் முதல் டெஸ்டில், 371 ரன்களை விரட்டிப் பிடித்து இங்கிலாந்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. அதேபோல், 2022-ல் இந்தியாவிற்கு எதிராக 378 ரன்களை வெற்றிகரமாக சேஸ் செய்து வரலாற்றுச் சாதனை படைத்தது.
நான்காம் நாள் ஆட்டம் குறித்துப் பேசிய ஜோஷ் டங், "நாளைய ஆட்டம் மிகச் சிறப்பாக இருக்கும். நாங்கள் இந்த ரன்களை எடுத்துவிட்டால், அது எங்களுக்கு ஒரு சிறந்த நாளாக அமையும். எங்களிடம் நம்ப முடியாத அளவுக்கு ஒரு சிறந்த பேட்டிங் வரிசை உள்ளது. பார்ட்னர்ஷிப்களை சரியாக அமைத்தால், நாங்கள் எங்கு வேண்டுமானாலும் சென்று வெற்றி பெறலாம். எனக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு வராது என்று நம்புகிறேன், ஆனால் ஒருவேளை கடைசி நேரத்தில் தேவைப்பட்டால், நான் எனது சிறந்த பங்களிப்பை அளிப்பேன்" என்று கூறினார்.
இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமாக விளையாடி 396 ரன்கள் குவித்தது. இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 118 ரன்கள் விளாசி அசத்தினார். மேலும், வாஷிங்டன் சுந்தர் (53), ரவீந்திர ஜடேஜா (53) மற்றும் ஆகாஷ் தீப் (66) ஆகியோர் அரைசதம் அடித்து அணிக்கு வலு சேர்த்தனர்.
மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், இங்கிலாந்து அணி 374 ரன்கள் என்ற இலக்குடன் தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கி, ஒரு விக்கெட் இழப்பிற்கு 50 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர் ஜாக் கிராலி (14) ஆட்டத்தின் கடைசிப் பந்தில் முகமது சிராஜ் வீசிய அற்புதமான யார்க்கர் மூலம் போல்டானார்.
பென் டக்கெட் 34 ரன்களுடன் களத்தில் உள்ளார். இங்கிலாந்து அணி வெற்றி பெற இன்னும் 324 ரன்கள் தேவைப்படும் நிலையில், போட்டியின் கடைசி நாள் ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் போட்டியில் அனுபவ வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் காயம் காரணமாக முதல் நாளிலேயே வெளியேறியதால், இங்கிலாந்து பந்துவீச்சுப் படை சற்று பலவீனமடைந்தது. இருப்பினும், இளம் வீரர் ஜோஷ் டங் சிறப்பாகப் பந்துவீசி, இரண்டாவது இன்னிங்ஸில் 125 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதல் இன்னிங்ஸிலும் அவர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார். அவருக்குத் துணையாக, கஸ் அட்கின்சன் இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.