லண்டன்: இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் நாளிலேயே, அம்பயர் குமார் தர்மசேனாவின் செயல்பாடு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து அணிக்குச் சாதகமாக அவர் நடந்துகொண்டதாகச் சமூக ஊடகங்களில் ரசிகர்கள் பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால் கிரிக்கெட் உலகில் பெரும் விவாதம் எழுந்துள்ளது. நடந்தது என்ன?
லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில், இந்திய இன்னிங்ஸின் 13வது ஓவரை இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் டங் வீசினார். அந்த ஓவரின் ஒரு பந்து, இந்திய வீரர் சாய் சுதர்சனின் பேடில் பட்டது. இதையடுத்து இங்கிலாந்து வீரர்கள் எல்பிடபிள்யூ (LBW) கேட்டு பலமாக அப்பீல் செய்தனர். ஆனால், களத்தில் இருந்த அம்பயர் குமார் தர்மசேனா, அவுட் இல்லை என்று தலையசைத்தார்.

பிரச்சனை இத்துடன் முடியவில்லை. டிஆர்எஸ் (Decision Review System) எடுப்பதற்கு 15 வினாடிகள் அவகாசம் இருந்த நிலையில், தர்மசேனா தனது விரல்களால் ஒரு சைகை செய்தார். அது பந்து பேட்டில் பட்டதைக் குறிப்பது போல இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சைகையைப் பார்த்த பிறகு, இங்கிலாந்து அணி டிஆர்எஸ் எடுக்க வேண்டாம் என்று முடிவு செய்தது. பின்னர் ரீப்ளேவில், பந்து சாய் சுதர்சனின் பேட்டில் பட்டது தெளிவாகத் தெரிந்தது. இதன் மூலம் தர்மசேனாவின் அவுட் இல்லை என்ற முடிவு சரியானது என்பது உறுதியானது.
நடுவரின் முடிவு சரியாக இருந்தாலும், அவர் டிஆர்எஸ் கால அவகாசம் முடிவதற்குள் சைகை காட்டியதுதான் சர்ச்சைக்கு முக்கியக் காரணம். ஒருவேளை தர்மசேனா அந்தச் சைகையைக் காட்டாமல் இருந்திருந்தால், இங்கிலாந்து அணி டிஆர்எஸ் எடுத்திருக்க வாய்ப்புள்ளது. அது அவர்களுக்கு ஒரு ரிவியூவை வீணாக்கி இருக்கும்.
அது இங்கிலாந்து அணிக்கு பாதகமாகவும், இந்திய அணிக்கு சாதகமான ஒன்றாகவும் இருந்திருக்கும். ஆனால், தர்மசேனாவின் சைகையால் இங்கிலாந்தின் ஒரு ரிவியூ காப்பாற்றப்பட்டது. இது இந்திய அணிக்கு பாதகமாகப் பார்க்கப்படுகிறது. கிரிக்கெட் விதிகளின்படி, ஒரு அம்பயர் தனது முடிவிற்கான காரணத்தை, குறிப்பாக டிஆர்எஸ் வாய்ப்பு இருக்கும்போது, களத்தில் உள்ள வீரர்களுக்குத் தெரிவிக்கக் கூடாது. இது ஆட்டத்தின் நியாயமான போக்கைப் பாதிக்கக்கூடும்.
இந்தச் சம்பவம் குறித்து பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர், "தர்மசேனா தனது பழைய பழக்கத்தின் காரணமாக இப்படிச் செய்திருக்கலாம். அவர் அம்பயரிங் செய்ய ஆரம்பித்த காலத்தில் டிஆர்எஸ் இல்லை. ஆனால், தற்போதைய சூழலில், அம்பயர்கள் தங்கள் மனதில் உள்ளதைச் சைகை மூலம் காட்டக்கூடாது. இது பந்துவீசும் அணிக்கு ஒரு குறிப்பைக் கொடுக்கும். அவர் அப்படிச் செய்திருக்கக் கூடாது" என்று கூறியுள்ளார்.
முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் அதர்டன், "இங்கிலாந்து தங்களது ரிவியூக்களை வீணாக்க வேண்டும் என்றுதான் இந்தியா விரும்பும்" என்று வர்ணனையின் போது குறிப்பிட்டார். இந்தச் சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. ரசிகர்கள் பலரும் தர்மசேனாவின் செயலை விமர்சித்து, இது நடுநிலைமைக்கு எதிரானது என்று பதிவிட்டு வருகின்றனர். இந்தத் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் முக்கியமான போட்டியின் முதல் நாளிலேயே எழுந்துள்ள இந்தச் சர்ச்சை, ஆட்டத்தில் மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளது.