லண்டன்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்க உள்ளது. இந்தத் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இந்த முக்கியமான போட்டியில், ஓவல் பிட்ச்சின் தன்மை எப்படி இருக்கும் என்பதே பெரும் விவாதமாக உள்ளது. ஆடுகளத்தில் உள்ள புற்கள் வேகப்பந்துவீச்சுக்குச் சாதகமாக இருக்குமா அல்லது ரன் மழை பொழிய உதவுமா? என்ற மர்மம் நீடிக்கிறது.
இந்த தொடரில் தற்போது இங்கிலாந்து அணி 2 - 1 என முன்னிலையில் உள்ளது. இந்திய அணியால் இந்த தொடரை வெல்ல முடியாது. ஆனால், கடைசி போட்டியில் வெற்றி பெற்று தொடரை 2 - 2 என சமன் செய்யலாம். அதற்கு ஓவல் மைதானத்தில் வெற்றி பெற வேண்டும்.

போட்டி தொடங்குவதற்கு ஒரு நாள் முன்பு வரை, ஆடுகளத்தின் தன்மை தெளிவாகத் தெரியவில்லை. புதன்கிழமை அன்று, ஆடுகளத்தில் கணிசமான அளவு புற்கள் காணப்பட்டன. இது வேகப்பந்துவீச்சாளர்களுக்குச் சாதகமாக அமையலாம் என்பதற்கான அறிகுறியாகும். ஒருவேளை போட்டி நாட்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டால், பேட்டிங் செய்வது மிகவும் சவாலானதாக இருக்கும்.
இந்தக் கணிப்புகளை உறுதிப்படுத்தும் விதமாக, இங்கிலாந்து அணி தனது ஆடும் லெவனில் நான்கு வேகப்பந்துவீச்சாளர்களைச் சேர்த்துள்ளது. சுழற்பந்துவீச்சுக்குத் தேவைப்பட்டால் ஜோ ரூட் மற்றும் ஜேக்கப் பெத்தெல் கைகொடுப்பார்கள்.
இந்திய அணியைப் பொறுத்தவரை, மான்செஸ்டரில் சதம் விளாசிய வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் நிச்சயம் அணியில் இடம்பிடிப்பார்கள். ஒருவேளை புற்கள் அப்படியே விடப்பட்டால், அணியில் அனுபவமிக்க வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லாதது கேப்டன் சுப்மன் கில்லுக்கு ஒரு பின்னடைவாக இருக்கலாம். ஜஸ்பிரித் பும்ரா விளையாட வாய்ப்பில்லை என்பதால், அர்ஷ்தீப் சிங் தனது அறிமுகப் போட்டியில் களமிறங்கலாம். இதனால், ஷர்துல் தாக்கூரும் தனது இடத்தை அணியில் தக்க வைத்துக் கொள்ள வாய்ப்புள்ளது.
இந்தத் தொடர் முழுவதுமே அதிக ரன்கள் குவிக்கப்பட்டு வருவதால், ஐந்தாவது டெஸ்டிலும் ரன் மழை தொடர வாய்ப்புள்ளது. ஓவல் மைதானம் சமீப காலமாக பேட்டிங்கிற்குச் சாதகமாகவே இருந்து வருகிறது. கடைசியாக இங்கு நடந்த கவுன்டி போட்டியில், சர்ரே அணி முதலில் பேட்டிங் செய்து 820 ரன்கள் குவித்தது. பதிலுக்கு ஆடிய டர்ஹாம் அணி முதல் இன்னிங்ஸில் 362 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்தப் போட்டியில் மொத்தமாக 1444 ரன்கள் குவிக்கப்பட்டது.
இதற்கு முந்தைய காலகட்டங்களில் ஷர்துல் தாக்கூர் ஓவல் மைதானத்தில் விளையாடிய இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் அரைசதம் அடித்துள்ளார். ஓவல் மைதானத்தில் கே.எல். ராகுல் 2018-ல் 149 ரன்களும், ரிஷப் பண்ட் 118 ரன்களும் அடித்துள்ளனர். எனவே, பேட்டிங்கிற்குச் சாதகமான ஆடுகளத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் மீண்டும் சிறப்பாகச் செயல்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
எப்போதுமே ஓவல் மைதானம் இந்திய அணிக்கு ராசியான ஒன்றாக இருந்ததில்லை. 2021-ல் பெற்ற ஒரு வரலாற்று வெற்றியைத் தவிர, இங்கு இந்திய அணிக்கு பெரும்பாலும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. கடைசியாக 2023-ல் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இதே மைதானத்தில்தான் இந்தியா தோல்வியடைந்தது.
சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, இந்த மோசமான வரலாற்றை மாற்றி, தொடரை சமன் செய்யும் முனைப்புடன் களமிறங்க உள்ளது.