ஓவல்: இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் ஆட்டமிழந்த போது இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப் செய்த செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அப்போது வர்ணனை செய்து கொண்டு இருந்த ஆஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பாண்டிங், "இதுவே என்னிடம் நடந்திருந்தால் ஆகாஷ் தீப்பின் முகத்தில் குத்து விட்டிருப்பேன்" என்று ஆவேசமாக கூறியுள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. போட்டியின் 2ஆம் நாளான நேற்று, இங்கிலாந்து இன்னிங்ஸின் 13வது ஓவரை ஆகாஷ் தீப் வீசினார். அந்த ஓவரில் அதிரடியாக விளையாடி வந்த பென் டக்கெட்டை (43 ரன்கள்) ஆகாஷ் தீப் ஆட்டமிழக்கச் செய்தார்.

விக்கெட் எடுத்த உற்சாகத்தில், பெவிலியன் திரும்பிக் கொண்டிருந்த பென் டக்கெட் அருகே சென்ற ஆகாஷ் தீப், அவரது தோள் மீது கைபோட்டு ஏதோ கூறினார். இது ஒருவிதமான ஆக்ரோஷமான வழியனுப்புதல் (send-off) போல அமைந்தது. இதற்கு டக்கெட்டும் லேசாகப் பதிலளித்தாலும், கோபமாக எதையும் செய்யாமல் அமைதியாகச் சென்றார். ஆனால், ஆகாஷ் தீப்பின் இந்தச் செயலை வர்ணனை அறையில் இருந்த ரிக்கி பாண்டிங், மைக்கேல் ஆதர்டன் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் கடுமையாக விமர்சித்தனர்.
வர்ணனையாளர் இயன் வார்டு, "கடந்த கால பேட்ஸ்மேன்கள் சிலருக்கு இது நிச்சயம் பிடித்திருக்காது. உதாரணமாக ரிக்கி பாண்டிங் இருந்திருந்தால் தனது வலது கையால் ஒரு குத்து விட்டிருப்பார்" என்று கிண்டலாகக் குறிப்பிட்டார். இதைக் கேட்ட ரிக்கி பாண்டிங், "ஆமாம், அநேகமாக அதைத்தான் செய்திருப்பேன்" என்று ஆவேசமாகக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "நான் இதைப் பார்த்தபோது, அவர்கள் இருவரும் ஒரே அணியில் விளையாடியிருப்பார்களோ என்று நினைத்தேன். இதுபோன்ற போட்டி நிறைந்த தொடரில் இப்படியெல்லாம் பார்ப்பது அரிது. ஆனால், இந்தச் சூழ்நிலையை பென் டக்கெட் கையாண்ட விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர் பதிலுக்கு எதுவும் செய்யாமல் அமைதியாகச் சென்றதால், என் மனதில் அவர் மீதான மரியாதை இன்னும் அதிகரித்துவிட்டது" என்று பாராட்டினார்.
இதனிடையே, இந்த டெஸ்ட் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமில்லை. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 247 ரன்களும், இந்தியா 224 ரன்களும் எடுத்தன. 23 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி, யாஷஸ்வி ஜெய்ஸ்வால்-இன் அபார அரைசதத்தால் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்கள் எடுத்து, 52 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.