லண்டன்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபியின் கடைசி டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது, இந்திய வீரர் சாய் சுதர்சன் மற்றும் இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் இடையே ஏற்பட்ட காரசாரமான வாக்குவாதம் மைதானத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த முக்கியமான போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் முடியும் தருவாயில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. கஸ் அட்கின்சன் வீசிய பந்தில், சாய் சுதர்சன் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். கள நடுவர் அவுட் கொடுத்ததும், மறுமுனையில் இருந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் உடன் ஆலோசித்த சுதர்சன், டி.ஆர்.எஸ் முறையீட்டிற்குச் சென்றார்.

இருப்பினும், ரீப்ளேவில் பந்து ஸ்டம்பைத் தாக்குவது தெளிவாகத் தெரிந்ததால் சாய் சுதர்சன் 11 ரன்களில் ஆட்டமிழந்து, ஏமாற்றத்துடன் வெளியேற வேண்டியிருந்தது. பெவிலியனை நோக்கி நடந்து சென்ற சாய் சுதர்சனை, இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் ஏதோ கூறி சீண்டினார். இதனால் கோபமடைந்த சாய் சுதர்சன், பாதியிலேயே திரும்பி வந்து டக்கெட்டுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இருவரும் வார்த்தைகளால் கடுமையாக மோதிக்கொள்ள, நிலைமை மோசமாவதை உணர்ந்த இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் மற்றும் தற்காலிக கேப்டன் ஒல்லி போப் ஆகியோர் உடனடியாகத் தலையிட்டு இருவரையும் விலக்கி வைத்தனர். இந்தச் சம்பவம் மைதானத்தில் நிலவிய பதற்றமான சூழலை மேலும் அதிகரித்தது. சாய் சுதர்சன் இத்தனை கோபம் அடைவாரா? என்றும் வியப்பை ஏற்படுத்தியது.
இந்தத் தொடர் முழுவதும் வீரர்களுக்கு இடையே அவ்வப்போது மோதல்கள் ஏற்பட்டு வரும் நிலையில், இந்த போட்டியின் இரண்டாம் நாளில் இது மட்டும் நடக்கவில்லை. முன்னதாக, இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் மற்றும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதேபோல், ஆகாஷ் தீப், பென் டக்கெட்டின் விக்கெட்டை வீழ்த்திய பிறகு அவரது தோள் மீது கைபோட்டு வழியனுப்பியது சர்ச்சையைக் கிளப்பியது.
போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்கள் எடுத்து, 52 ரன்கள் முன்னிலையில் உள்ளது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 44 பந்துகளில் அரைசதம் அடித்து, 51 ரன்களுடனும், நைட்வாட்ச்மேனாகக் களமிறங்கிய ஆகாஷ் தீப் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
முன்னதாக, முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோரின் அபார பந்துவீச்சால், தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 247 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இங்கிலாந்து 23 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றது. இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 224 ரன்களுக்கு ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது. போட்டி சமநிலையில் இருப்பதால், மூன்றாவது நாள் ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.