லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில், இந்திய அணி தோல்வியின் விளிம்பில் இருந்தபோது, இளம் கேப்டன் சுப்மன் கில் பேசிய சில வார்த்தைகள் ஆட்டத்தின் தலையெழுத்தையே மாற்றியுள்ளது. அவரின் இந்த உத்வேகமான பேச்சு, இந்திய அணிக்கு ஒரு புதிய நம்பிக்கையைக் கொடுத்து, போட்டியில் அற்புதமாக மீண்டு வர உதவியது.
ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் 5-வது டெஸ்ட் போட்டியில், 374 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி களமிறங்கியது. இந்த மைதானத்தில் இதுவரை எந்த அணியும் இவ்வளவு பெரிய இலக்கை எட்டி வெற்றி பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நான்காம் நாள் ஆட்டத்தில், இங்கிலாந்து அணி ஒரு கட்டத்தில் 106 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

ஆனால், அதன் பிறகு ஜோடி சேர்ந்த ஹாரி புரூக் (111) மற்றும் ஜோ ரூட் (105) ஆகியோர் இந்திய பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 195 ரன்கள் சேர்த்து, இங்கிலாந்தின் வெற்றியை கிட்டத்தட்ட உறுதி செய்தது. குறிப்பாக, ஜோ ரூட் தனது 39-வது டெஸ்ட் சதத்தை விளாசியபோது, இங்கிலாந்தின் வெற்றிக்கு வெறும் 44 ரன்களே தேவைப்பட்டன, கையில் 6 விக்கெட்டுகள் இருந்தன. இந்திய வீரர்கள் சோர்ந்துபோய், போட்டி கையை விட்டுப் போய்விட்டதாக நினைத்தனர்.
அந்த நேரத்தில் தான், ஸ்லிப்பில் நின்று கொண்டிருந்த சுப்மன் கில், சக வீரர்களைப் பார்த்து இந்தியில் உற்சாகமாகப் பேசினார். அது ஸ்டம்ப் மைக்கில் தெளிவாகப் பதிவானது. "வாங்க பசங்களா.. இன்னும் ஒரு மணி நேரம் மட்டும் கஷ்டப்படுவோம், அதுக்கப்புறம் எல்லாரும் சேர்ந்து ஓய்வெடுக்கலாம்" (Come on, boys. Ek ghanta aur zor lagayenge, uske baad sab mil ke aaraam karenge) என்று அவர் கூறினார்.
சுப்மன் கில் இப்படிச் சொன்ன அடுத்த சில நிமிடங்களிலேயே ஆட்டத்தில் அற்புதம் நிகழ்ந்தது. பிரசித் கிருஷ்ணா வீசிய பந்தில் ஜேக்கப் பெத்தேல் அவுட் ஆனார். அடுத்த ஓவரிலேயே, சதமடித்து இந்தியாவிற்கு பெரும் தலைவலியாக இருந்த ஜோ ரூட்டையும் பிரசித் கிருஷ்ணா வெளியேற்ற, இங்கிலாந்து அணி அதிர்ச்சிக்குள்ளானது. அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழ, இங்கிலாந்து அணி 337 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. வெற்றி உறுதியாகிவிட்டதாகக் கொண்டாட்டத்தில் இருந்த இங்கிலாந்து ரசிகர்களுக்கு இது பேரதிர்ச்சியாக அமைந்தது. இந்திய அணிக்கு திடீரென புத்துயிர் கிடைத்தது.
நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில், மோசமான வானிலை மற்றும் மழை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது. அப்போது இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 339 ரன்கள் எடுத்திருந்தது. இங்கிலாந்தின் வெற்றிக்கு இன்னும் 35 ரன்கள் தேவை. அதே சமயம், தொடரை 2-2 என சமன் செய்ய இந்திய அணிக்கு 4 விக்கெட்டுகள் மட்டுமே தேவை. இதனால், போட்டியின் கடைசி நாளான இன்று ஆட்டத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுப்மன் கில்லின் இந்த ஒரு நம்பிக்கையூட்டும் பேச்சு, தொடரின் முடிவையே தீர்மானிக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.