மும்பை: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய வீரர் அபிமன்யூ ஈஸ்வரன் முக்கிய பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் ஒரு முறை கூட அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் கூட அபிமன்யு ஈஸ்வரன் சிறப்பாகவே செயல்பட்டார்.
தொடர்ந்து இந்திய ஏ அணி தொடரில் விளையாடி வரும் அபிமன்யு ஈஸ்வரனுக்கு, இந்திய மெயின் அணியில் ஒரு முறை கூட வாய்ப்பு கிடைக்கவில்லை. இது குறித்து அபிமன்யு ஈஸ்வரனின் தந்தை விக்கி லால்வாணி தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

youtube சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், இந்திய ஏ அணியில் அபிமன்யூ ஈஸ்வரன் தேர்வு செய்யப்பட்டார். தென் ஆப்பிரிக்கா தொடரில் இந்திய அணிக்காக விளையாடும்போது மூன்றாம் இடத்தில் களமிறங்கி சதம் அடித்தார். மார்க்கோ யான்சன் உள்ளிட்ட திறன் வாய்ந்த வேகப்பந்துவீச்சாளர்களை அவர் எதிர்கொண்டார்.
புஜாரா அந்த தொடரில் இடம்பெறவில்லை. அவருக்கு மாற்று வீரராக அப்போதைய பயிற்சியாளர் அபிமன்யூ ஈஸ்வரனை தயார் செய்தார். ஆனால் அப்போதும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. தென்னாப்பிரிக்க பயணத்திலிருந்து மீண்டும் வந்தபோது பெங்கால் அணி கர்நாடகாக்கு எதிராக காலிறுதியில் தோல்வியை தழுவியது.
இதனால் விஜய் ஹசாரே தொடரில் ஈஸ்வரன் விளையாட முடியவில்லை. இந்த தருணத்தில் ஐபிஎல் திறமை கண்டறியும் குழு போட்டிகளை பார்க்கும்போது அபிமன்யு ஈஸ்வரன் விளையாடவே இல்லை.ஐபிஎல் தொடரில் எனது மகனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
ஒருவேளை அதில் அவர் தேர்வு செய்யப்பட்டு தனது திறமையை காட்டி இருந்தால் நிச்சயம் இந்திய அணியிலும் அவர் தேர்வு செய்யப்பட்டு இருப்பார் என்று அவர் கூறினார். 2022 ஆம் ஆண்டு வங்கதேச தொடரிலிருந்து அபிமன்யூ ஈஸ்வரன் கூடுதல் தொடக்க வீரராக அணியில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். ஆனால் ஒரு முறை கூட அவருக்கு வாய்ப்பு கிடைத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.