லண்டன்: இந்திய டெஸ்ட் அணியில் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்காததால், இளம் வீரர் அபிமன்யு ஈஸ்வரனின் தந்தை, இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு முறையை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அபிமன்யு ஈஸ்வரன் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் இடம்பெற்றிருந்தும், ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு வழங்கப்படாமல் பெஞ்சில் அமரவைக்கப்பட்டு இருக்கிறார். தனது மகனுக்கு இழைக்கப்படும் அநீதி குறித்து ரங்கநாதன் ஈஸ்வரன் வேதனையுடன் பேசியிருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட அபிமன்யு ஈஸ்வரன், பெங்கால் அணிக்காக உள்ளூர் கிரிக்கெட்டில் ரன்களைக் குவித்து இருக்கிறார். துலீப் டிராபி, இரானி கோப்பை, ரஞ்சி கோப்பை என அனைத்து விதமான போட்டிகளிலும் சதங்களையும், இரட்டை சதங்களையும் விளாசி, இந்திய டெஸ்ட் அணியின் கதவைத் தொடர்ந்து தட்டி வந்தார். கடந்த ஆண்டு மட்டும் சுமார் 864 ரன்களை அவர் குவித்துள்ளார். அதன் காரணமாக இந்திய டெஸ்ட் அணியில் மாற்று வீரராக இடம் பிடித்து இருக்கிறார். ஆனாலும், அவருக்கான போட்டியில் ஆடும் வாய்ப்பு மட்டும் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இங்கிலாந்து தொடரில் தனது மகன் புறக்கணிக்கப்பட்டது குறித்து பேட்டியளித்த ரங்கநாதன் ஈஸ்வரன், தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். "அபிமன்யு தனது டெஸ்ட் அறிமுகத்திற்காக காத்திருக்கும் நாட்களை நான் கணக்கிடவில்லை, வருடங்களை எண்ணிக் கொண்டிருக்கிறேன்; இப்போது மூன்று வருடங்கள் ஆகிவிட்டது," என்று வேதனையுடன் குறிப்பிட்டார்.
"ஒரு வீரரின் வேலை ரன் குவிப்பது. அதை அவன் சிறப்பாகச் செய்துள்ளான். ஆனாலும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. என் மகன் மனச்சோர்வுடன் காணப்படுகிறான், இப்படி நடந்தால் யாருக்குத்தான் அப்படி ஆகாது?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும், டெஸ்ட் அணிக்கு வீரர்களைத் தேர்வு செய்யும் முறையையும் அவர் கடுமையாகச் சாடினார். "ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடும் வீரர்களுக்கு டெஸ்ட் அணியில் எளிதாக இடம் கிடைத்துவிடுகிறது. இது எந்த விதத்தில் நியாயம்? டெஸ்ட் அணிக்கு ரஞ்சி கோப்பை, துலீப் கோப்பை மற்றும் இரானி கோப்பை ஆகியவற்றில் காட்டும் திறமையே அடிப்படையாக இருக்க வேண்டும்," என்று அவர் கூறினார்.
"ஒருவேளை என் மகனுக்கும் ஐபிஎல்-ல் விளையாட வாய்ப்பு கிடைத்திருந்தால், இந்த வெளிச்சம் காரணமாக எப்போதோ இந்திய அணிக்கு அறிமுகமாகியிருப்பான்." என வருத்தத்துடன் தெரிவித்தார்.
அபிமன்யுவுக்குப் பதிலாக கருண் நாயருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டதையும் அவர் விமர்சித்தார். "கருண் நாயர் சிறப்பாக ஆடி 800 ரன்களுக்கு மேல் அடித்ததால் தேர்வாளர்கள் அவர் மீது நம்பிக்கை வைத்துள்ளனர், சரி. ஆனால் அபிமன்யு சிறப்பாகச் செயல்பட்ட காலகட்டத்தில் கருண் நாயர் துலீப் கோப்பையிலோ அல்லது இரானி கோப்பையிலோ தேர்வு செய்யப்படவே இல்லை. அப்படி இருக்கும்போது இருவரையும் எப்படி ஒப்பிடுகிறார்கள்? இது எனக்குப் புரியவில்லை. நீங்கள் ஒப்பிட வேண்டும் என்றால் கடந்த ஆண்டு முதல் இப்போது வரை 864 ரன்கள் எடுத்துள்ளான். " என்றார்.
உள்நாட்டுப் போட்டிகளில் தொடர்ந்து ரன் மழை பொழிந்தும், இந்தியா 'ஏ' அணிக்குக் கேப்டனாக இருந்தும், அபிமன்யு ஈஸ்வரனுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. 2022 டிசம்பரில் வங்கதேச சுற்றுப்பயணத்தின் போது முதன்முதலில் இந்திய அணிக்கு அழைக்கப்பட்டதிலிருந்து, சுமார் 15 வீரர்கள் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகியுள்ளனர். ஆனால் அபிமன்யுவின் காத்திருப்பு தொடர்கிறது. இந்த நிலை இனியாவது மாறுமா என கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.