மும்பை : இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் இந்திய அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை பதிவு செய்திருக்கிறது. இதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில், இந்திய அணி நான்கிற்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றி இருக்கிறது.
இந்திய அணியில் தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா 54 பந்துகளை எதிர்கொண்டு 135 ரன்கள் விளாசினார். இதனால் இந்திய அணி ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 247 ரன்கள் எடுத்தது. இந்த நிலையில் தோல்வி குறித்து பேசிய இங்கிலாந்து அணி கேப்டன் ஜாஸ் பட்லர், தொடரை இழந்தது மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்ததாக கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து பேசிய அவர், "இந்த தொடரில் நாங்கள் பல நல்ல விஷயங்களை செய்திருக்கிறோம். ஆனால் சில விஷயங்களை நாங்கள் இன்னும் முன்னேற்றம் அடைய வேண்டும். நாங்கள் தோல்வியை தழுவினாலும் இதே போன்ற அதிரடி ஆட்டத்தை விளையாட வேண்டும் என்று எங்களுக்குள் நாங்களே உறுதி கொண்டிருக்கின்றோம்".
"எனினும் எங்களுடைய திட்டத்தை இன்னும் சிறந்த முறையில் செயல்படுத்த வேண்டும் என நினைக்கின்றேன். இந்திய அணி ஒரு பிரமாதமான அணி.அதுவும் சொந்த மண்ணில் அவர்களை வீழ்த்துவது என்பது மிகவும் கடினம். மும்பை வான்கடே மைதானத்தில் இதுபோன்ற ரசிகர்கள் முன் விளையாடியது சிறந்த அனுபவமாக இருந்தது".
"இந்த தொடரில் எங்களுக்கு சில பாசிட்டிவான விஷயங்களும் இருந்தது. எங்களுடைய பவுலர்கள் நன்றாக செயல்பட்டு இருக்கிறார்கள். இந்த போட்டியில் அதிக ரன்கள் சென்றபோது கூட மார்க் வுட் ,பிரைடன் கார்ஸ் ஆகியோர் நன்றாக பந்து வீசி இருக்கிறார்கள். நான் என் வாழ்நாளில் பல கிரிக்கெட் ஆட்டங்களை பார்த்திருக்கிறேன்".
"அதில் அபிஷேக் ஷர்மாவின் இன்றைய இன்னிங்ஸ் தான் நான் பார்த்ததில் சிறந்த ஒன்று" என்று ஜாஸ் பட்லர் பாராட்டியுள்ளார். சிவம் துபே பதில் ஹர்ஷித் ராணா கடந்த போட்டியில் சேர்க்கப்பட்டது குறித்து ஜாஸ் பட்லர், டாசின் போது கிண்டல் செய்த நிலையில் இன்று சிவம் துபே பந்து வீச்சில் பட்டையை கிளப்பி இருக்கிறார். இரண்டு ஓவர்கள் வீசி அவர் 11 ரன்கள் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.