கொல்கத்தா: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் அபிஷேக் ஷர்மா 34 பந்துகளில் 79 ரன்கள் குவித்தார். இதில் எட்டு இமாலய சிக்சர்களும் ஐந்து பவுண்டரிகளும் அடங்கும். இதன் மூலம் 133 என்ற வெற்றி இலக்கை இந்திய அணி 43 பந்துகள் எஞ்சிய நிலையில் வெற்றி பெற்றிருக்கிறது.
இந்த நிலையில் தன்னுடைய பேட்டிங் குறித்து பேசிய அபிஷேக் ஷர்மா பயிற்சியாளர் கம்பீரும், கேப்டன் சூரியகுமார் யாதவும் கொடுத்த சுதந்திரம் தான் காரணம் என்று கூறியிருக்கிறார். இது குறித்து பேசிய அவர், தமது ஆட்டம் சிறப்பாக அமைந்ததற்கு அவர்கள் இருவரும் தான் காரணம்.

ஆடுகளம் கொஞ்சம் கணிக்க முடியாத படி இரட்டை தன்மையுடன் இருந்தது. ஆனால் எங்களுடைய பவுலர்கள் அபாரமாக செயல்பட்டார்கள். நான் பில்டிங் செய்யும் போது 160 முதல் 170 ரன்கள் துரத்த வேண்டி இருக்கும் என நினைத்தோம். ஆனால் எங்கள் வீரர்கள் அபாரமாக செயல்பட்டார்கள்.
நானும் சஞ்சு சாம்சனும் நல்ல பார்ட்னராக இருக்கிறோம். ஒருவருக்கொருவர் பேட்டிங் செய்யும்போது மகிழ்ச்சியுடன் பேட்டிங் செய்கிறோம். நான் முதன்முதலாக இந்திய அணிக்கு பேட்டிங் செய்ய வந்தபோது என்னுடைய திட்டம் எல்லாம் சிம்பிளாக தான் இருந்தது. ஐபிஎல் தொடரில் எப்படி விளையாடுனேனோ, அதேபோல் தான் இங்கும் விளையாட வேண்டும் என நினைத்தேன்.
ஆனால் சர்வதேச கிரிக்கெட் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. இங்கு நமது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். நமக்கு வரும் ஷாட் பாலை சிறப்பாக ஆட வேண்டும். ஒரு ஷாட்டை எப்படி ஆட வேண்டும் என்பதற்கான ஆரம்ப புள்ளி குறித்து நான் பயிற்சியில் ஈடுபட்டேன். எனக்கு ஷார்ட் பால் அதிகம் வீசப்படும்.
என்னுடைய பொறுமையை இங்கிலாந்து பவுலர்கள் சோதிப்பார்கள் என நான் நினைத்தேன். அதற்கு தகுந்தார் போல் என்னுடைய பயிற்சியை நான் மேற்கொண்டேன் என அபிசேக் சர்மா கூறியுள்ளார். இந்த நிலையில் முதல் டி20 போட்டியில் அபிஷேக் சர்மாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வருண் சக்கரவர்த்திக்கு அந்த விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது. வருண் சக்கரவர்த்தி நான்கு ஓவர்கள் வீசி 23 ரன்கள் விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினார்.