கொல்கத்தா : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 12 புள்ளி 5 ஓவரிலே வெற்றி இலக்கை எட்டி ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஐந்து டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு வந்துள்ளது.
இதில் முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் இன்று நடைபெற்றது. பனிப்பொழிவு மிகவும் அதிகமாக இருந்ததால் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூரியகுமார் யாதவ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனை அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஆர்ஸ்தீப் சிங் அபாரமாக பந்து வீசி பில் சால்ட், பென் டக்கட் விக்கெட்டை அடுத்தடுத்து வீழ்த்தினார். ஒரு கட்டத்தில் பட்லருடன் இணைந்து ஹாரி புரூக் அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தார். அப்போது வருண் சக்கரவர்த்தி ஒரே ஓவரில் ஹாரி புருக், லியோன் லிவிங்ஸ்டோன் விக்கெட்டை அடுத்தடுத்து வீழ்த்தினார்.
இதன் பிறகு இங்கிலாந்து வீரர்கள் எவ்வளவு முயற்சித்தும் அவர்களால் ரன்கள் சேர்க்க முடியவில்லை. இந்தியாவில் சுழற் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் பெவிலியன் நோக்கி அணிவகுப்பு நடத்தினர். இதனால் 20 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 132 ரன்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது. கேப்டன் பட்லர் 68 ரன்கள் சேர்த்தார்
இந்திய பந்துவீச்சு தரப்பில் வருண் சக்கரவர்த்தி மூன்று விக்கெட்டுகளும், அக்சர் பட்டேல், ஹர்திக் பாண்டியா, ஆர்ஸ்தீப் சிங் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இதனை அடுத்து 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இங்கிலாந்து அணி வீசிய இரண்டாவது ஓவரில் சஞ்சு சாம்சன் 4 பவுண்டரி ஒரு சிக்சர் அடித்து 22 ரன்களை குவித்தார்.
சஞ்சு சாம்சன் பெரிய ஸ்கோர் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 26 ரன்களில் அவர் ஆட்டம் இந்தார். இந்த நிலையில் சூரிய குமார் டக் அவுட் ஆகி வெளியேற தொடக்க வீரராக களமிறங்க அபிஷேக் ஷர்மா பட்டையை கிளப்பினார். இங்கிலாந்தின் பந்துவீச்சை சிக்ஸருக்கும் பவுண்டரிக்கும் விரட்டினார். இதன் மூலம் 20 பந்துகளில் அபிஷேக் ஷர்மா அரை சதம் அடித்து அசத்தினார்.
தொடர்ந்து அதிரடி காட்டிய அபிஷேக் ஷர்மா 34 பந்துகளில் 79 ரன்கள் குவித்தார். இதில் ஐந்து பௌண்டரிகளும் 8 இமாலய சிக்சர்களும் அடங்கும். இறுதியில் திலக் வர்மா 19 ரன்களும் ஹர்திக் பாண்டியா மூன்று ரன்களும் எடுக்க இந்திய அணி 12.5 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை 43 பந்துகள் எஞ்சிய நிலையில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.