ராஜ்கோட் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 445 ரன்களை குவித்து ஆல் அவுட்டாகியது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 326 ரன்கள் சேர்த்திருந்தது. இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா 110 ரன்களுடனும், குல்தீப் யாதவ் ஒரு ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்த நிலையில் 2வது நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கியது.

இதில் ஜடேஜா 112 ரன்களிலும், குல்தீப் யாதவ் 4 ரன்களிலும் ஆட்டமிழக்க, இந்திய அணி 350 ரன்களையாவது எடுக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. இதன்பின் இணைந்த அஸ்வின் - ஜுரெல் கூட்டணி இந்திய அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தியது. அதிலும் அறிமுக வீரர் ஜுரெல், மார்க் வுட் 146 கிமீ வேகத்தில் வீசிய பந்தை அப்பர் கட் ஷாட் மூலமாக சிக்சராக மாற்றியது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இவர்கள் இருவரும் உணவு இடைவேளை வரை விக்கெட் கொடுக்காமல் விளையாடினர். இதனால் இந்திய அணியின் ஸ்கோர் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 388 ரன்களாக இருந்தது. இதன்பின் 2வது செஷனில் அதிரடியாக இருவரும் ரன்கள் சேர்க்க தொடங்கிய நிலையில், இந்திய அணியின் ஸ்கோர் 400 ரன்களை கடந்தது. இதையடுத்து 8வது விக்கெட்டுக்கு 77 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், அஸ்வின் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜுரெல் 46 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து கடைசி விக்கெட்டுக்கு சிராஜை எதிர்முனையில் வைத்து கொண்டு பும்ரா அதிரடியாக சிக்ஸ், பவுண்டரி என்று பொளந்து கட்டினார். கடைசி விக்கெட்டுக்கு 30 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், மார்க் வுட் வேகத்தில் பும்ரா 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 1998ஆம் ஆண்டுக்கு பின் சொந்த மண்ணில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 350 ரன்களுக்கு மேல் சேர்த்து தோல்வியடைந்ததாக வரலாறு இல்லை. ஆனால் ராஜ்கோட் மைதானம் பேட்டிங்கிர்கு சாதகமாக இருப்பதால், இங்கிலாந்து அணியை முதல் இன்னிங்ஸில் விரைந்து ஆல் அவுட் செய்தால் வெற்றி நிச்சயம் என்று பார்க்கப்படுகிறது.