மும்பை: இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பிளேயிங் லெவனில் ஆல்ரவுண்டர்களை கொண்டு வராமல், முழுமையான பவுலரை சேர்க்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் அஜிங்கியா ரஹானே வலியுறுத்தியுள்ளார். 3 ஆல்ரவுண்டர்களுடன் விளையாடுவது இந்திய அணிக்கு பின்னடைவு என்று கூறியுள்ள அவர், குல்தீப் யாதவ் களமிறங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இதனால் மான்செஸ்டர் நகரில் நடக்கவுள்ள 4வது டெஸ்ட் போட்டி மீதான எதிர்பார்ப்பு கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் இந்திய அணிக்கு இந்த போட்டி வாழ்வா, சாவா போட்டியாகும்.

இதற்கான இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் ரிஷப் பண்ட் விரலில் ஏற்பட்டுள்ள காயம், பும்ரா விளையாடுவாரா என்ற சந்தேகமும் வலுத்துள்ளது. இதனால் சர்வதேச கிரிக்கெட் ஜாம்பவான்கள் தொடங்கி இந்திய ரசிகர்கள் வரை அனைவரும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் கேப்டன் சுப்மன் கில்லுக்கு ஆலோசனை அளித்து வருகின்றனர்.
பிளேயிங் லெவன் தொடங்கி பிட்சின் தன்மை வரை ஆராயப்பட்டு வருகிறது. இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வந்தாலும், ஆங்காங்கே செய்யும் சில தவறுகள் இந்திய அணியின் தோல்விக்கு காரணமாகி வருகின்றன. குறிப்பாக பிளேயிங் லெவனில் மிஸ்ட்ரி ஸ்பின்னரான குல்தீப் யாதவை கொண்டு வர கவுதம் கம்பீர் முயற்சிக்காதது ஏன் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அந்த வரிசையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அஜிங்கியா ரஹானேவும் இணைந்துள்ளார். அவர் தொடங்கியுள்ள யூட்யூப் சேனலில் ரஹானே பேசுகையில், இங்கிலாந்து மண்ணில் 4 மற்றும் 5 ஆகிய நாட்களில் பேட்டிங் செய்வது மிகவும் கடினம் என்பது அனைவருக்கும் தெரிந்த ரகசியம்தான். லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த போட்டியில் இங்கிலாந்து சிறப்பாக பவுலிங் செய்தது என்பதை மறுக்க முடியாது.
ஆனால் முதல் இன்னிங்ஸில் பெரிய ஸ்கோரை அடிக்கும் வாய்ப்பை இந்திய அணி தவறவிட்டது. அதேபோல் அடுத்த 2 போட்டிகளில் பிளேயிங் லெவனில் கூடுதலாக ஒரு பவுலரை சேர்க்க முயற்சிக்க வேண்டும். ஏனென்றால் எதிரணியின் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்தினால் மட்டுமே டெஸ்ட் தொடரையோ அல்லது டெஸ்ட் போட்டியையோ வெல்ல முடியும்.
பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு ஆல்ரவுண்டர்கள் மீது அதிக பாசம் இருப்பதை மதிக்கிறேன். ஆனால் வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி என்று 3 ஆல்ரவுண்டர்கள் தேவையில்லை. இவர்களில் ஒருவரை நீக்கிவிட்டு நிச்சயமாக குல்தீப் யாதவை சேர்க்க ஆலோசிக்க வேண்டும். ஏனென்றால் இங்கிலாந்து மண்ணில் குல்தீப் யாதவின் தேவை அதிகமாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.