லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது இங்கிலாந்து அணியை எரிச்சல் அடைய செய்திருக்கிறது.இதனால் ஏதேனும் வாய்க்கு வந்தபடி சில கருத்துக்களை இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்து வந்தனர். குறிப்பாக இந்திய அணி நிர்ணயித்த 608 ரன்கள் என்ற இலக்கை இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கி விளையாடியது.
இதில் ஒன்று இந்திய அணி வெற்றி பெறும். இல்லையென்றால் போட்டி சமநிலையில் முடியும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.இங்கிலாந்து அணி போட்டியை சமன் செய்ய வேண்டுமென்றால் ஜோ ரூட் பெரிய இன்னிங்ஸ் ஒன்றை ஆட வேண்டும் என்று எதிர்பார்த்தனர். இந்த சூழலில் ஜோ ரூட் 6 ரன்கள் எடுத்திருந்தபோது, ஆகாஷ் தீப்பின் அபார பந்துவீச்சில் ஸ்டெம்புகள் சிதற ஆட்டமிழந்தார்.

இது ஆட்டத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக இங்கிலாந்து அணி 271 ரன்களில் அனைத்து விக்கெட்டு களையும் இழந்தது. இந்த தருணத்தில் ஜோ ரூட்டுக்கு ஆகாஷ் தீப் வீசிய பந்து பேக் புட் நோபால் என்றும், இதற்கு நடுவர்கள் நோபால் வழங்கியிருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இதன் காரணமாக ஜோ ரூட் தவறான முறையில் ஆட்டம் இழந்து விட்டதாகவும், அவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இதற்கு இந்திய ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். ஆகாஷ் தீப் பந்து சரியான முறையில் வீசப்பட்டு இருக்கிறது என்றும் இங்கிலாந்து அணி தோற்று விட்டு அதற்கான காரணத்தை தேடுவதாகவும் சாடியிருந்தனர்.
இந்த நிலையில் ஐசிசிக்காக விதிகளை வகுத்து அதனை பாதுகாக்கும் எம்சிசி தற்போது இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது. அதில் பேக் புட் நோபால் விதிப்படி முதலில் பந்துவீச்சாளர் எங்கு காலை வைக்கிறாரோ, அது கோட்டுக்கு உள்ளே இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் தான் அது நோபால். ஆனால் ஆகாஷ் காலை முதலில் சரியாக வைத்து பந்தை வீசிய பிறகு தான் அவருடைய கால் கோட்டிற்கு வெளியே சென்றதாகவும் எனவே இது நோபால் கிடையாது என்றும் விளக்கம் அளித்துள்ளது.