ராஞ்சி : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் சார்பாக இளம் வீரர் ஆகாஷ் தீப் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி ராஞ்சி மைதானத்தில் நாளை மறுநாள் தொடங்கவுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் அடைந்த தோல்விக்கு பின் இந்திய அணி, அடுத்தடுத்து 2 போட்டிகளில் வென்று தரமான கம்பேக்கை கொடுத்துள்ளது. இதன் மூலம் 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரில் முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில் 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பும்ராவுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் அனுபவ வீரர் கேஎல் ராகுல் முழு ஃபிட்னஸை எட்டாததால், அவரும் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இளம் வீரர் ரஜத் பட்டிதர் கூடுதலாக இன்னொரு வாய்ப்பை பெறுவார். அதேபோல் பும்ராவை இடத்தில் எந்த வேகப்பந்துவீச்சாளர் விளையாடுவார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ராஞ்சி மைதானம் சுழற்பந்துவீச்சாளர்களுக்கும், அதிகமாக கட்டர்ஸ் வீசும் பவுலர்களுக்கும் நன்றாக ஒத்துழைக்கும் என்று பார்க்கப்படுகிறது.
இதனால் முகேஷ் குமார் அல்லது ஆகாஷ் தீப் இருவரில் யாருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கும் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. 2வது டெஸ்ட் போட்டியில் சிராஜ்-க்கு ஓய்வு வழங்கப்பட்ட நிலையில், முகேஷ் குமாருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அப்போது களமிறங்கிய முகேஷ் குமார் ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தி ஏமாற்றமளித்தார். ஆனால் மறுமுனையில் பும்ரா 9 விக்கெட்டுகளை சாய்த்தார். இதனால் உடனடியாக ஒரு போட்டியில் ஓய்வு வழங்கப்பட்டு ரஞ்சி டிராபி தொடரில் விளையாட அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிலையில் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய ஏ அணிக்காக 2 போட்டிகளில் ஆடிய ஆகாஷ் தீப் 11 விக்கெட்டுகளை சாய்த்தார். இதனால் 4வது டெஸ்ட் போட்டியில் ஆகாஷ் தீப்பை களமிறங்க இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால், ராஞ்சி மைதானத்தின் தன்மை மற்றும் சூழல் குறித்து நன்றாக அறிந்தவர். அதேபோல் 4வது டெஸ்டில் ஆகாஷ் தீப் அறிமுகம் செய்யப்பட்டால், இந்த தொடரில் இந்திய அணிக்காக விளையாடும் 4வது அறிமுக வீரர் என்ற பெருமையை பெறுவார்.