மும்பை: இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டி முடிவடைந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. ஆனால் ரசிகர்கள் மனதில் இன்றும் இந்த போட்டி நீங்க வில்லை. கடைசி நாளில் இங்கிலாந்து வெற்றிக்கு 35 ரன்களும், இந்தியாவின் வெற்றிக்கு நான்கு விக்கெட்டுகளும் தேவைப்பட்ட நிலையில், முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் அபாரமாக பந்து வீசி இந்தியாவுக்கு வெற்றியைத் தேடித் தந்தனர்.
இந்த நிலையில் இந்தப் போட்டியின் போது முதல் இன்னிங்சில் அபாரமாக பேட்டிங் செய்து கொண்டிருந்த பென் டக்கட் விக்கெட்டை ஆகாஷ் தீப் வீழ்த்தினார். அப்போது பென் டக்கட் தோளில் கையை போட்டு அவர் ஏதோ பேசினார். அதற்கு டக்கட்டும் வெறுப்புடன் களத்தை விட்டு சென்றார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது குறித்து கருத்து தெரிவித்திருந்த ரிக்கி பாண்டிங், "நான் அவுட் ஆன பிறகு என் மீது யாரேனும் கையை போட்டு இருந்தால் நான் மூக்கிலே குத்திருப்பேன்" என்று கூறியிருந்தார். இந்த நிலையில் சிறுவயது பயிற்சியாளர் ஆகாஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் உண்மையிலேயே அன்று என்ன நடந்தது? டக்கட்டிடம் நான் என்ன சொன்னேன் என்பது குறித்து ஆகாஷ் தீப் மவுனத்தை கலைத்திருக்கிறார். இது குறித்து பேசிய அவர், "டக்கட்டுக்கு எதிராக நான் நல்ல ரெக்கார்டை வைத்திருந்தேன். நான் சில முறை அவரை ஆட்டம் இழக்க செய்திருக்கின்றேன். இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக நான் நன்றாக பந்து வீசுவேன். அவரும் எனக்கு பெரிய விதிவிலக்கு அல்ல."
"ஆனால் அன்றைய நாளில் பென் டக்கட், என்னுடைய பந்துவீச்சை குலைக்கும் விதமாக பல முறையற்ற ஷாட்களை ஆடினார். இதன் மூலம் என்னுடைய லயன் மற்றும் லெங்த் தடுமாறியது, உண்மையை சொல்ல வேண்டுமென்றால் அன்று நான் கொஞ்சம் தடுமாறினேன். அப்போது என்னிடம், இன்று எனது நாள். உன்னால் என்னை ஆட்டமிழக்க வைக்க முடியாது என்று டக்கட் கூறினார்."
"அது எனக்கு உத்வேகத்தை அதிகரித்தது. இதை அடுத்து நான் அவரை ஆட்டம் இழக்க செய்தவுடன் எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. உடனே நான் அவர் தோள்பட்டையில் கையை போட்டு, நீங்கள் மிஸ் செய்து விட்டீர்கள் நான் விக்கெட் எடுத்து விட்டேன். எப்போதுமே நீங்கள் தான் ஜெயிப்பீர்கள் என்று நினைக்காதீர்கள். இம்முறை நான் வெற்றி பெற்று விட்டேன் என்று கூறினேன்.ஆனால் நாங்கள் இருவரும் நட்பு ரீதியாக தான் சிரித்துக்கொண்டு பேசினோமே தவிர கோபமாக சொல்லவில்லை. இதுதான் அன்று நடந்தது" என்று ஆகாஷ் தீப் கூறினார்.