பிர்மிங்காம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப் வீசிய அபாரமான பந்துவீச்சால், இங்கிலாந்து அணி வரிசையாக விக்கெட்டுகளை இழந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் தடுமாறி வந்த இங்கிலாந்து அணி இந்தப் போட்டியை டிரா செய்ய திட்டமிட்டு இருந்தது.
ஆனால், ஆகாஷ் தீப் ஐந்தாவது நாள் ஆட்டம் தொடங்கியவுடன் இரண்டு முக்கிய விக்கெட்டுகளைச் சாய்த்தார். நான்காவது நாள் ஆட்டத்திலும் அவர் 2 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். இதன் மூலம் இரண்டாவது இன்னிங்க்ஸில் மொத்தம் 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.

முன்னதாக, இந்தப் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 587 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 407 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்ஸ் ஆடிய இந்திய அணி 427 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இங்கிலாந்து அணிக்கு 608 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.
இந்த இலக்கை எட்ட முடியாது என்பதை உணர்ந்திருந்த இங்கிலாந்து அணி டிரா செய்ய திட்டமிட்டிருந்தது. ஆனால், நான்காவது நாள் முடிவிற்குள் அந்த அணி 72 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்தது. இந்த நிலையில், ஐந்தாவது நாள் ஆட்டத்தில் ஏழு விக்கெட்டுகளை வைத்துக்கொண்டு இந்தப் போட்டியை இங்கிலாந்து அணி டிரா செய்யுமா என்ற கேள்வி எழுந்தது. அதே சமயம், இந்திய அணி விரைவாக விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது.
அதற்கு ஏற்ப ஆகாஷ் தீப், ஐந்தாவது நாள் ஆட்டம் தொடங்கியவுடன் ஒல்லி போப் விக்கெட்டை வீழ்த்தினார். அடுத்த இரண்டு ஓவர்கள் கழித்து அவர் ஹாரி ப்ரூக் விக்கெட்டையும் வீழ்த்தினார். இதை அடுத்து இங்கிலாந்து அணி 22வது ஓவரில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 83 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.
முதல் இன்னிங்ஸிலும் ஆகாஷ் தீப் சிறப்பாக பந்து வீசி இருந்தார். அப்போது அவர் 4 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். இரண்டாவது இன்னிங்ஸிலும் அவர் 4 விக்கெட்களை வீழ்த்தி இருப்பது இந்த டெஸ்ட் தொடரில் ஆகாஷ் தீப் மீதான நம்பிக்கையை அதிகரித்து உள்ளது. இனி அவருக்கு இந்த தொடரின் மீதமுள்ள போட்டிகளில் தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.