மும்பை: இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்காக இந்திய அணி தீவிரமாக பயிற்சி செய்து வருகிறது. ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட நெடுந்தொடரில் பொதுவாக வீரர்களுக்கு காயம் ஏற்படலாம்.
இதனால் மாற்று வீரர்கள் எப்போதும் அணியில் இருப்பார்கள். இதேபோன்று இது நெடுந்தொடர் என்பதால் வீரர்கள் பயிற்சி செய்வதற்கு என கூடுதல் வீரர்களை ஒவ்வொரு அணியும் அழைத்துச் செல்வது வழக்கம்.

அந்த வகையில் தற்போது சுப்மன் கில் தலைமையில் 18 வீரர்களை இந்திய அணி தேர்வு செய்திருக்கிறது. மேலும் ஏதேனும் ஒரு வேகப்பந்துவீச்சாளர் காயம் அடைந்தால் என்ன செய்வது என்பதற்காக மாற்று வீரர்கள் அணியில் தேர்வு செய்யப்படுவார்கள்.இந்த நிலையில் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக இந்திய ஏ அணி வீரர்கள் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றனர்.
இதில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் ரிசர்வ் வீரராக அணியில் இடம் பிடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இதில் சிஎஸ்கே அணியில் அன்சூல் காம்போஜ், அபாரமாக செயல்பட்டு இருக்கிறார். பந்துவீச்சில் ஐந்து விக்கெட்டுகள் மற்றும் பேட்டிங்கில் ஆட்டம் இழக்காமல் 51 ரன்கள் என அன்சூல் காம்போஜ் பட்டையைக் கிளப்பு இருந்தார்.
இவர் ஏற்கனவே ரஞ்சி கிரிக்கெட்டிலும் அபாரமாக விளையாடி ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட் வீழ்த்தி இருந்தார். ஐபிஎல் தொடரிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அன்சூல் காம்போஜ் திருப்திகரமாக செயல்பட்டார். இந்த நிலையில் அன்சூல் கம்போஜை ரிசர்வ் வீரராக இங்கிலாந்து தொடரில் இந்திய அணி நிர்வாகம் தேர்வு செய்யும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் அனுசூல் கம்போஜை, இந்திய அணி நிர்வாகம் வீட்டுக்கு அனுப்பி இருக்கிறது. இதேபோன்று இடதுகை வேகப்பந்து வீச்சாளரான கலீல் அகமத் இரண்டு இன்னிங்ஸில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். கலீல் அகமதின் இடது கை வேகப்பந்துவீச்சு நிச்சயம் இங்கிலாந்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் அவரும் வீட்டுக்கு அனுப்பப்பட்டு இருக்கிறார்.
அவருக்கு பதிலாக ஹர்ஷித் ரானா என்ற வேகப்பந்துவீச்சாளரை கம்பீர் தங்க வைத்திருக்கிறார்.
கம்பீர் கொல்கத்தா அணியின் பயிற்சியாளராக இருந்தபோது ஹர்ஷித் ராணா கே கே ஆர் அணியில் தேர்வு செய்யப்பட்டார். இதனால் ஹர்ஷித் ராணா ஏற்கனவே இந்திய அணியில் விளையாடிய நிலையில் தற்போது ரிசர்வ் வீரராக சேர்க்கப்பட்டிருக்கிறார்.இதற்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். பயிற்சி ஆட்டத்தில் ஹர்சித்ரானா ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்திய நிலையில், கம்பீர் கோட்டாவிலிருந்து வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாகவும், திறமை வாய்ந்த வீரர்களுக்கு இடம் தருவதில்லை என்றும் அவர்கள் விமர்சித்திருக்கின்றனர்.