மும்பை: இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இங்கிலாந்து அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. தற்போது இந்திய அணி நான்காவது டெஸ்ட் போட்டியில் வரும் புதன்கிழமை விளையாட இருக்கிறது.
இந்த போட்டிக்கு தயாராக இருந்தபோது இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஆர்ஸ்தீப் சிங் காயம் அடைந்திருக்கிறார். இதனால் அவர் அணியை விட்டு விலகி இருக்கிறார்.இதன் காரணமாக இந்திய அணியில் சிஎஸ்கே வீரர் அன்சூல் கம்போஜ் சேர்க்கப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதுவரை 24 முதல் தர போட்டிகளில் விளையாடி உள்ள அன்சூல் காம்போஜ் 79 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் இங்கிலாந்தில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் அன்சூல் காம்போஜ் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இதனால் அன்சூல் காம்போஜ்க்கு இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அன்சூல் காம்போஜின் அண்ணன் சன்யாம், எங்களுடைய ஒட்டுமொத்த குடும்பமே மகிழ்ச்சியில் இருக்கின்றது. இந்த சந்தோஷத்தை எந்த வார்த்தைகளாலும் விவரிக்க முடியாது.
இந்திய அணியில் விளையாடுவதற்காக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இது உண்மையிலேயே கனவு போன்றதாக இருக்கின்றது. இதற்காக அவர் கடுமையாக உழைத்து இருக்கின்றார். ஒவ்வொரு நாள் காலையிலும் பயிற்சி செய்வதற்காக மைதானத்திற்கு செல்வார்.
வீட்டிற்கு வர மாட்டார். ஒரு நாள் முழுவதும் மைதானத்தில் தங்கி பயிற்சி செய்து இரவு தான் வீடு திரும்புவார். அவருடைய பணி என்பது அவ்வளவு எளிதாக அமையவில்லை என்று அன்சூல் காம்போஜின் அண்ணன் கூறியுள்ளார். இதேபோன்று இந்திய அணியின் மற்றொரு வேகப்பந்துவீச்சாளரான ஆகாஷ் தீப் காயம் அடைந்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதனால் அவர் பயிற்சியில் பங்கேற்கவில்லை. இதன் காரணமாக அன்சூல் காம்போஜிக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.